அஜித் அல்லது விஜய்.. யாரை பிடிக்கும்.. பிரஸ்மீட்டில் வந்த கேள்வி.. அண்ணாமலை சொன்ன பதில்
திண்டுக்கல்: சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, சில வார்த்தைகளை சேர்த்தும், மறுத்தும் உரையாற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆற்றிய உரையில் தனது கருத்தை எங்கேயும் திணிக்கவில்லை என்றும், மாநில அரசு கொடுக்கும் உரையை ஆளுநர் அப்படியே படிக்க கூடாது என்பதே பாஜகவின் கருத்து என்றும் தெரிவித்துள்ளார்.
மதுரையில் பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பின்னர் பொங்கல் விழாவில் கலந்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் வந்த அண்ணாமலை, பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் மாநில செயற்குழு மற்றும் முகாமில் பங்கேற்றார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை கூறுகையில், தமிழ்நாடா, தமிழகமா என்று அரசாணை போடுவதற்கு ஆளுநருக்கு உரிமையில்லை.

தமிழ்நாடு, தமிழகம்
என்னை பொறுத்தவரை தமிழ்நாடு, தமிழகம் இரண்டுமே ஒன்றுதான். தமிழ்நாட்டிற்கு உயர்ந்த கலாச்சார பின்னணி இருக்கிறது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்தை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் விருப்பம். ஆளுநர் ஆர்.என்.ரவி காவல்துறையில் பணியாற்றி, தமிழ்நாடு கலாச்சாரத்தை முழுமையாக அறிந்தவர். அதனால் திமுக தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது என்று தெரிவித்தார்.

அமைதி பூங்கா?
தொடர்ந்து சட்டசபை விவகாரம் தொடர்பான கேள்விக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவியில் எந்த இடத்திலும் சொந்த கருத்தை திணிக்கவில்லை. தமிழ்நாட்டை பல இடங்களில் பாராட்டி பேசி இருக்கிறார். கடந்த முறை ஆளுநர் ஆர்.என்.ரவி ஆற்றிய உரையை பாஜக எதிர்த்தது. அதேதான் இம்முறையும். தமிழ்நாடு அமைதி பூங்கா அல்ல. கோவை குண்டுவெடிப்பு, பெண் காவலருக்கு பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரச்சினைகள் நிகழ்ந்துள்ளது.

பாஜக கருத்து
ஆனால் தமிழ்நாடு அரசு கொடுப்பதை ஆளுநர் படிக்க வேண்டும் என்பது மரபு. அதேபோல் ஆளுநர் உரையில் இருந்த தகவல்கள் பல தவறானது. திமுக கொடுக்கும் உரையை ஆளுநர் ரவி படிக்க கூடாது. ஆளுநர் அப்படி படிக்க கூடாது என்பது எனது கருத்து மட்டுமல்ல. பாஜகவின் கருத்தும் அதுதான் என்று தெரிவித்தார்.

அண்ணாமலை குற்றச்சாட்டு
அதேபோல், சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவதற்கு முன்பாக விசிக, சிபிஎம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளுநர் யாருக்கும் எதிராக இல்லை. இதுவரை ஆளுநர் ஆர்.என்.ரவி 64 மசோதாக்களுக்கு கையெழுத்து போட்டுள்ளார். தமிழ்நாடு மக்களுக்கு நல்லது செய்யவே ஆளுநர் வந்துள்ளார் என்று தெரிவித்தார்.

இது சரியா?
அதேபோல், தேசிய கீதம் பாடுவதற்கு முன் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது சரியா என்ற கேள்விக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி உரை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒப்புதல் இல்லை என்றால், தீர்மானம் கொண்டு வரலாம். ஆனால் ஆளுநர் முன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். இது சரியா என்று கேள்வி எழுப்பினார்.

ஒன்றிய அரசு சரியா?
தொடர்ந்து ஒன்றிய அரசு என்று கூறுவதில் தவறில்லை என்று ஆளுநர் பேசிய கருத்து பற்றிய கேள்விக்கு, ஒன்றிய அரசு என்பது தவறான சொல்லாடல். ஒன்றியம் என்ற வார்த்தையில் முழுமையான பிணைப்பு இல்லை. தமிழ்நாடு அரசு பயன்படுத்தும் ஒன்றிய அரசு என்ற வார்த்தை தவறானது என்று தெரிவித்தார்.

அஜித், விஜய்
மேலும், அண்ணாமலையிடம் வாரிசு மற்றும் துணிவு படங்கள் பற்றி நிருபர்கள் கேள்வியெழுப்பியபோது பேசிய அவர், எனக்கு விஜயையும் பிடிக்கும், அஜித்தையும் பிடிக்கும். இதில் அரசியல் செய்யும் ஆள் நான் கிடையாது. எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் அஜித் திரை உலகில் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளார். அஜித் உழைப்பு அசாத்தியமானது. விஜய் நடித்த முதல் படத்தை நான் பார்த்திருக்கிறேன். இன்று அவரது படங்கள் பிரம்மாண்டமாக இருக்கின்றன. இப்போது மிரட்டி இருக்கிறார். விஜய் தனது நடிப்பை மெருகேற்றி முன்னேறி இருக்கிறார் என்பதை ஒவ்வொரு படத்திலும் பார்க்கிறோம். இப்போதெல்லாம், எனக்கு தியேட்டர்களில் படம் பார்ப்பதற்கு போதிய நேரம் கிடைக்கவில்லை. எனக்கு இரண்டு பேரையும் பிடிக்கும். வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டு படங்களையும் நான் பார்ப்பேன். வாரிசு அரசியலை துணியுடன் எதிர்ப்பேன். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications