கிளி போச்சு.. அதான் எலி இருக்கே! எலி ஜோசியத்துக்கு மாறிய ஜோசியர்கள்! திண்டுக்கல்லில் கூட்டம் அள்ளுது
திண்டுக்கல்: வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் படி பட்டியலிடப்பட்ட உயிரினங்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் கிளி ஜோசியம் பார்த்து வந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அடுத்து எலி ஜோசியத்திற்கு மாறி மக்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் அருகே ஜோசியர் ஒருவரின் எலி ஜோசியத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் வழக்கமாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில், அப்பகுதி சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் எலியுடன் ஒருவர் சோசியம் பார்த்து வந்தார். அவரிடம் எலி ஜோசியம் பார்ப்பதற்காக மக்கள் அதிக அளவு கூடினர்.

தென்காசியை சேர்ந்த முருகேசன் (55) என்பவர், கடந்த பல ஆண்டுகளாக கிளி ஜோசியம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கிளி ஜோசியம் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால், கடந்த சில ஆண்டுகளாக கிளி ஜோசியம் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், கிளி ஜோசியத்திற்கு பதிலாக எலி ஜோசியம் பார்த்து வருகிறார் அவர். வீட்டில் வளரும் எலியை பிடித்து அதற்கு குறி சொல்லும் சீட்டு எடுத்துக் கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கி, அதன் மூலம் எலி ஜோசியம் பார்த்து வருகின்றனர். கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் எலி, ஜோசியர் முருகேசன் கூறுவதைக் கேட்டு ஜோசியம் பார்க்கும் நபரின் பெயரைச் சொல்லி, அவர் பெயருக்கு ஒரு சீட்டு எடுத்துக் கொடு! என்றவுடன் ஜோசியர் முன்பாக குவித்து வைக்கப்பட்டிருந்த சீட்டுகளை எடுத்து ஜோசியர் முருகேசன் கையில் எலி கொடுக்கிறது.
பின்னர், அவர் அந்த நபரின் நிலை குறித்து, எதிர்காலம் குறித்து ஜோசியம் சொல்கிறார். இதனை ஆர்வமாக அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேடிக்கை பார்த்து வருவதுடன், தாங்கள் எலி ஜோசியமும் பார்க்க குவிந்து வருகின்றனர். எலி ஜோசியம் கூறுவது போல் சிலருக்கு நல்லது நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. தான் வளர்த்து வரும் எலிக்கு கேரட், சாப்பாடு, இட்லி உள்ளிட்ட உணவுகளை கொடுத்து வருகிறார். எலி ஜோசியத்திற்கு ரூபாய் 30 முதல் 50 வரை காணிக்கையாக பெறுவதாக முருகேசன் கூறுகிறார். தற்போது நிலக்கோட்டை மற்றும் அணைப்பட்டி பகுதியில் எலி ஜோசியம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
கிளி ஜோசியத்துக்கு தடை ஏன்?: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டம் 1972-ன் படி பட்டியலிடப்பட்ட உயிரினங்களை வீட்டில் வளர்க்கவும் அதனை காட்சிப்படுத்தவும் தடை செய்யப்பட்டது. அந்த பட்டியலில் பச்சைக் கிளிகளும் சேர்க்கப்பட்டது. இதை அடுத்து வீடுகளில் பச்சைக்கிளிகளை வளர்க்கவும் அவற்றை வைத்து ஜோசியம் பார்க்கவும் வனத்துறையினர் தடை விதித்தனர்.
மேலும் வீட்டில் பச்சைக்கிளி வளர்த்தவர்கள் மற்றும் கிளி ஜோசியம் பார்த்தவர்கள் அதனை வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஏராளமான நபர்கள் தாங்கள் வளர்த்து வந்த பச்சைக் கிளிகளை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அதே நேரத்தில் பச்சை கிளியை நம்பி கிளி ஜோசியம் பார்த்து வந்தவர்கள் கடும் பாதிப்படைந்த நிலையில் வயிற்றுப் பிழைப்புக்கு வழியில்லாமல் தற்போது எலி ஜோசியத்திற்கு மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications