கையில் கஞ்சாவுடன் பார்க்கில் ரீல்ஸ்.. A few moments later..! அதே பார்க்கில் போலீஸ் செய்த சம்பவம்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பார்க் ஒன்றில் கஞ்சா புகைப்பது எப்படி என ரீல்ஸ் போட்ட 6 இளைஞர்களை பழனி காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில் சிறையில் அடைப்பதற்கு முன் அவர்களை அதே பார்க்கில் வைத்து நூதன தண்டனை வழங்கி அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர் போலீசார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலை அடிவாரத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் சில இளைஞர்கள் போதையில் மிதப்பது போல் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

அதில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சாவை பயன்படுத்தி அதன் மூலம் போதை ஏறி பூங்காவில் விழுந்து கிடப்பது போல வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி உள்ளனர்.
இப்படி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை பயன்படுத்துவது மற்றும் பொது இடத்தில் விழுந்து கிடப்பது போன்று வீடியோ பதிவிட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வாட்சப், பேஸ்புக்கில் தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து இணையத்தில் வீடியோ வெளியிட்ட நபர்களை போலீசார் தேடி வந்தனர். மேலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் தனிப்படையினர் அமைக்கப்பட்டு கஞ்சா வியாபாரியை போலீஸார் தேடிவந்தனர்.
இந்த நிலையில் கஞ்சா ரீல்ஸ் தொடர்பாக பழனியை அடுத்த பாலசமுத்திரத்தை சேர்ந்த சிவக்குமார், மகாபிரபு, கார்த்தி, பாலசுப்ரமணியன், ராம்குமார், மதன்குமார் ஆகிய 6 நபர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் கஞ்சா புகைக்க பயன்படுத்திய Bong (புகையிலை உறிஞ்சி). கைப்பற்றப்பட்டு வழக்கு பதிந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கஞ்சா புகைக்கும் ரீல்ஸ் வீடியோ சம்பந்தமாக பாலசமுத்திரத்தை சேர்ந்த மணிகண்டன் , மதி மற்றும் கஞ்சா விற்பனையில் தொடர்புடைய பாலசமுத்திரத்தை சேர்ந்த பாஸ்கர் மற்றும் முத்துராஜா ஆகியோர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு தனிப்படையினர் தேடி வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில நாட்களாக கள்ளச் சந்தை மது விற்பனைக்கு திண்டுக்கல் முழுவதும் தடை விதிக்கப்பட்டு கட்டுப்பாடாக இருக்கும் நிலையில், கஞ்சா வியாபாரத்தை தடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதற்கிடையே கஞ்சா புகைத்து ரீல்ஸ் போட்ட ஆறு பேரும் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சார்பில் அதே சிறுவர் பூங்காவில் வைத்து சிறுவர்கள் கஞ்சா போதையில் எந்தெந்த இடத்தில் அமர்ந்து வீடியோ செய்தார்களோ அதே இடத்தில் வைத்து போலீசார் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி வீடியோ எடுத்துள்ளனர்.
பாதாகைகளை ஏந்திய இளைஞர்கள், கஞ்சா வீட்டுக்கும் நாட்டுக்கும் உடலுக்கும் கேடு, போதை தரும் தீதை மாறும் நம் பாதை, சிறுவர் பூங்கா சிறுவர்களுக்கானது- சீர்கேடுகளுக்கானது அல்ல, கஞ்சா எதற்கு எனக்கு - கல்வி இருக்கு நமக்கு , கல்வி தரும் பாதை இருக்க இழிவு தரும் போதை எதற்கு என பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி லைக்குகளுக்கு ஆசைப்பட்டு தாங்கள் வீடியோ வெளியிட்டதாகவும் எங்களைப் போன்று தப்பான முன்னுதாரணமாக அமைய கூடாது , போதைப் பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம் என அவர்களை பேச வைத்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அதற்கு பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications