சுயேச்சையாக களமிறங்கிய திமுக பிரமுகர்! அதிர்ச்சியில் கம்யூனிஸ்ட்கள்! சங்கரன்கோவில் சலசலப்பு!
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டில் திமுக பிரமுகர் சுயேச்சையாக களமிறங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது காம்ரேடுகளை கலக்கம் அடைய வைத்துள்ளது.
திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களை கூட்டணிக் கட்சிக்கு தாரை வார்த்துவிட்டதாக தமிழகத்தின் பல இடங்களில் மாவட்டச் செயலாளர்கள் மீது ஏற்கனவே உடன்பிறப்புகள் உஷ்ணத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சங்கரன்கோவிலில் மொத்தம் 30 வார்டுகள் உள்ள நிலையில் நகராட்சியை கைப்பற்ற திமுக -அதிமுக இடையே இந்தமுறை கடும் போட்டி நிலவும் எனத் தெரிகிறது.

தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 8-வது வார்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 8-வது வார்டு தனக்கு தான் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடும், எதிர்பார்ப்போடும் கடந்த தீபாவாளி பண்டிகையின் போதே வீடு வீடாக இனிப்புகள் வழங்கி வாக்குசேகரிப்பை தொடங்கியிருந்தார் திமுக பிரமுகர் சரவணக்குமார். மேலும், மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாதனும், சட்டமன்ற உறுப்பினர் ராஜாவும் தன்னை கைவிடமாட்டார்கள் என்ற எண்ணத்தில் கணக்கு வழக்கில்லாமல் கட்சிக்காக செலவும் செய்திருக்கிறார்.

கூட்டணிக்கு ஒதுக்கீடு
இந்நிலையில் 8-வது வார்டை கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்க்கு ஒதுக்கியிருக்கிறார் தென்காசி திமுக மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாதன். இதனிடையே அதே 8-வது வார்டில் சுயேச்சையாக களமிறங்கி கம்யூனிஸ்ட் வேட்பாளரை கலக்கம் அடைய வைத்திருக்கிறார் திமுக பிரமுகர் சரவணக்குமார். அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு இது போன்ற நிகழ்வுகள் உதாராணமாக அமைவது குறிப்பிடத்தக்கது.

ஏன் பிடிவாதம்
இந்த முறை கம்யூனிஸ்ட் கட்சிக்கு வார்டை விட்டுக் கொடுக்குமாறும் அடுத்தடுத்து கூட்டுறவு சங்கங்களில் பொறுப்புகள் தரப்படும் எனவும் பேச்சுவார்த்தை நடத்தியும் திமுக பிரமுகர் சரவணக்குமார் அதனை ஏற்க முன்வரவில்லையாம். காரணம் மறைந்த அவரது தந்தை 8-வது வார்டில் 20 ஆண்டுகள் கவுன்சிலராக இருந்ததால் அந்த இடத்தில் போட்டியிட்டு வெற்றிபெறுவதை செண்டிமெண்டாக பார்க்கிறாராம்.

பல இடங்களில்
சங்கரன்கோவிலை போலவே தென்காசி மாவட்டத்தின் பல இடங்களில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் திமுக மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாதன் மீது அதிருப்தியில் இருக்கிறார்களாம். அவர்களை அழைத்து சமாதானம் பேசி வரும் சிவ பத்மநாதன், கூட்டுறவு சங்கங்களில் முக்கியப் பொறுப்புகள் கொடுக்கப்படும் பேச்சு நடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications