நாகாலாந்து: "நாய் கறி”க்காக 3 ஆண்டுகள் சட்டரீதியான உரிமைப் போர் நடத்திய வரலாறு தெரியுமா உங்களுக்கு?
சென்னை: நாகாலாந்து நாய்கறி விவகாரத்தை முன்வைத்து தமிழ்நாடு அரசியலில் சூடான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
”நாய்கறி சாப்பிடும் நாகாலாந்துகாரர்களே சொரணையோடு அங்கு ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை விரட்டியடித்தார்கள்” என்று மூத்த திமுக தலைவர் ஆர்.எஸ்.பாரதி பேசியதுதான் பெரும் சர்ச்சை.
இதற்கு பதில் தந்துள்ள ஆளுநர் மாளிகை, நாகாலாந்து மக்களை நாய்கறி தின்பவர்கள் என இழிவுபடுத்திவிட்டார் ஆர்.எஸ்.பாரதி என கண்டனமும் தெரிவித்துள்ளது. ஆனால் தாம் இழிவுபடுத்தவில்லை.. அவர்களது உணவு பழக்கத்தைதான் சுட்டிக்காட்டினேன் என்கிறார் ஆர்.எஸ்.பாரதி.

நாகாலாந்து மக்களின் வாழ்வியலில் இன்றியமையாத ஒன்று நாய் கறி என்பது உண்மைதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழ்நாட்டில் ஆட்டு கறிதான் காஸ்ட்லி. சொந்த பந்தங்கள் ஒன்று கூடினால் ஆடு வெட்டி விருந்து வைப்பது வழக்கம். அதுபோலதான் நாகாலாந்தில் உறவினர்களுக்கு நாய் கறி விருந்து வைப்பது அவர்களது பண்பாடு.
நாகாலாந்து தலைநகர் கோஹிமாவில் நடப்பது, பறப்பது, ஊர்வது என அத்தனை பிராணிகளும் சாப்பிட உயிருடன், கருவாடாக கிடைக்கும். நாய் தலைகளை சுட்டு வைத்திருப்பதையும் நாய் கறிகளை சுட்டு தொங்க விட்டிருப்பதையும் பொதுவெளியில் இயல்பாகவே பார்க்க முடியும்.
நாகாலாந்து மாநிலத்தில் எந்த அசைவ ஹோட்டலுக்கு போனாலும் விதம் விதமான நாய்கறி வெரைட்டிகள் கிடைக்கும். நமக்குதான் ஒவ்வாமை. ஆனால் நம்மூர் சிக்கன் வெரைட்டிகள் போல வகை வகையான நாய்கறி டிஷ்கள் வறுத்தது, குழம்பு என அத்தனையும் கிடைக்கும்.
ஆனால் நாம் ஆடுகளை வெட்டுவதைப் போல பக்குவமாக பதூசாக நாய்களை நாகாலாந்து மக்கள் வெட்டி “கூறு போடுவது” இல்லை என்பதுதான் பிரச்சனையாக வெடித்தது. நாகாலாந்து மக்கள் நாய்களை மிக மிக கர்ண கொடூரமான முறையில்தான் அடித்தே கொன்று கறியாக்குவதுதான் அடிப்படை பிரச்சனை. நாய்களை ஒரு சாக்கில் கட்டி அதன் வாயை நன்றாக கட்டிவிட்டு உருட்டு கட்டைகளால் அடி அடியென கதற கதற அடித்து சாகடித்துவிட்டு பின்னர் தீயில் வாட்டி கறிகளை வெட்டி எடுப்பதுதான் நாகாலாந்து பாணி.
இதற்கு எதிராகத்தான் மேனகா காந்தி உள்ளிட்டோர் வலிமையாக குரல் கொடுத்தனர். நீதிமன்ற படிகளேறினர். இதனால் நாகாலாந்தில் 2020-ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகள் நாய்கறி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மிக நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின்னரே அண்மையில் நாகாலாந்தில் நாய்கறி விற்பனை மீதான தடை நீக்கப்பட்டிருந்தது. இப்போது நாகாலாந்து நாய்கறி விற்பனை கன ஜோராக நடைபெறுகிறது. ஆக நாகாலாந்து நாய்கறி உரிமைப் போராட்டம் என்பது அந்த மக்களின் சரித்திரத்தில் இடம் பெற்ற ஒன்று.












Click it and Unblock the Notifications