ஏமன் கிளர்ச்சியாளர்களின் அடிமடியிலேயே கை வைத்த டிரம்ப்.. அமெரிக்க தாக்குதலில் 74 பேர் பலி
துபாய் : ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட எண்ணெய் துறைமுகத்தை குறிவைத்து அமெரிக்க விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 74 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் 171 பேர் காயமடைந்தனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து நடத்திய மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலுக்கு எதிராக போரிட்டு வரும் பாலஸ்தினத்தின் ஹமாஸ் படையினருக்கு, அண்டை நாடான ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு ஆதரவு அளித்துள்ளது. ஆதரவுடன் மட்டுமின்றி செங்கடல் உள்ளிட்ட கடல் பகுதிகளில், அமெரிக்காவின் சரக்கு கப்பல்கள் உள்ளிட்டவற்றின் மீது ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அமெரிக்கா கடும் கோபத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில் ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க போவதாக டொனால்டு டிரம்ப் கடந்த மார்ச் 15ம் தேதி அறிவித்திருந்தார். இதன்படியே ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட எண்ணெய் துறைமுகத்தை குறிவைத்து அமெரிக்க விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 74 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் 171 பேர் காயமடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேநேரம் அமெரிக்க ராணுவத்தின் மத்திய கமாண்டோ படை இப்படி நடத்திய தாக்குதல் குறித்தோ அல்லது அதன் குறிப்பிட்ட இலக்குகள் மற்றும் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்த எந்த தகவலையும் உடனடியாக வெளியிடவில்லை.
இதற்கிடையில், ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுமே தாக்கப்பட்ட பகுதி தொடர்பான தகவல்களை வெளியிடுவது இல்லை என்று கூறப்படுகிறது. ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமானவற்றை தாக்கும் போதும், தாக்கிய பின்னரும் எந்த தகவல்களையும் வெளியிடுவது இல்லை..
எனினும் தற்போது அமெரிக்கா, ஏமனின் ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின் மீது நடத்திய மிகப்பெரிய வான்வெளி தாக்குதல் மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அடுத்ததாக ஏமன் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா ஆரம்பித்திருப்பது உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் கிராஃபிக் காட்சிகளை ஹவுத்திகள் உடனடியாக வெளியிட்டிருக்கிறார்கள்.
இதனிடையே ஊடகம் ஒன்றுக்கு கருத்துதெரிவித்த அமெரிக்க ராணுவம். "ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி பயங்கரவாதிகளுக்கு எரிபொருள் வழங்கும் இந்த தளத்தை அகற்றவும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக முழு பிராந்தியத்தையும் அச்சுறுத்தும் ஹவுத்தி முயற்சிகளுக்கு நிதியளித்த சட்டவிரோத வருவாயை அவர்களுக்குப் பறிக்கவும் அமெரிக்கப் படைகள் நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்தத் தாக்குதல் ஏமன் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கம் கொண்டதல்ல என்றும் அவர்கள் ஹவுத்தி அடிமைத்தனத்தின் தூக்கி எறிந்துவிட்டு அமைதியாக வாழ விரும்புகிறார்கள் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. அதேநேரம் அங்கு ஏற்பட்ட எந்தவொரு உயிரிழப்பு குறித்தும் ஒப்புக்கொள்ளவில்லை.. பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. தற்போது பாலத்தீனத்தை தொடர்ந்து ஏமனும் போரில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க தாக்குதல் நடத்திய ராஸ் இசா துறைமுகம், ஏமனின் செங்கடலில் உள்ள ஹோடைடா கவர்னரேட்டில் அமைந்திருக்கிறது. ஏமனின் தற்போது கிளர்ச்சியாளர்கள் தான் ஆண்டு வருகிறார்கள். ஹவுத்திகள் எண்ணெயைக் கொண்டுவர ராஸ் இசா துறைமுகத்தை பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications