துபாயில் பொங்கல் கொண்டாட்டத்தில் தேமுதிக தொண்டர்கள்.. விஜயகாந்துக்கு சிறப்பு பிரார்த்தனை
துபாய்: தேமுதிக அமீரகபிரிவு சார்பாக துபாயில் தமிழர் திருநாளாம் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தேமுதிக நிறுவனரும், அக்கட்சியின் தலைவருமான விஜயகாந்த் தற்போது அமெரிக்காவில் உள்ளார். உடல்நல பெற சிகிச்சைக்காக அவர் அங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அமெரிக்காவில் விஜயகாந்த் சிகிச்சை நடைபெற்று வருவதாகவும், விரைவில் அவர் நலம் பெற்று நாடு திரும்புவார் என்றும் அவரது மகன் விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.
இந் நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளிலும் தேமுதிகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தியும், அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கியும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
வெளிநாடுகளிலும் உள்ள தேமுதிக தொண்டர்களும், அவரவர் இருக்கும் பகுதியிலேயே பொங்கலை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, துபாயில் உள்ள சிவன் கோவில் செயலாளர் மதுரை S.காரல்மார்க்ஸ் தலைமையில் விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவில், அவைத்தலைவர் காமல் ,பொருளாலர் சதீஷ்குமார், துணைச்செயலாளர் மாரிமுத்து, அம்ஜத் அலி, சகிலன், நெல்லை தவசி முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர் முகமது ரபிக், அனிப்பா விழாவில் கலந்து கொண்டு விஜயகாந்த் நலம் பெற்று வாழ சிறப்பு வழிபாடு நடத்தினர்.
பின்னர், அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். பொங்கல் விழாவில் தேமுதிகவை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் மற்றும் நண்பர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர். தேமுதிக அமீரகபிரிவு சார்பாக துபாயில் இந்த சமத்துவ பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.