அந்த மனசுதான்.. துபாயில் தவித்த இந்தியர்களுக்காக அடுக்குமாடி குடியிருப்பை இலவசமாக கொடுத்த தொழிலதிபர்
துபாய்: அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் ஈரான் தாக்கி வருகிறது. இதனால், துபாய் உள்பட வளைகுடாவில் முக்கிய நகரங்களில் பலரும் சிக்கி தவித்த நிலையில், அங்குள்ள இந்திய தொழிலதிபர் ஒருவர் தனது அடுக்குமாடி குடியிருப்பில் இலவசமாக தங்க இடம் கொடுத்து உதவி வருகிறார்.
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் 11 வது நாளாக நீடித்து வருகிறது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்தியர்களுக்காக திறந்து வைத்தார்
இஸ்ரேல் மீது ஈரான் நேற்றும் பயங்கர தாக்குதல்களை நிகழ்த்தியது. டிரோன்கள், ஏவுகணைகள் ஓய்வின்றி அந்த நாட்டை நோக்கி பாய்ந்து சென்றதை காண முடிந்தது. சவுதி அரேபியா, பஹ்ரைன் உள்ளிட்ட அண்டை நாடுகள் மீதும் ஈரான் குண்டுவீச்சை தொடர்ந்தது. இதனால் வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், வளைகுடா நாடுகளுக்கு பல்வேறு காரணங்களுக்காக சென்ற இந்தியர்கள், அங்கு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், மனிதாபிமான அடிப்படையில், அல் மிசான் குழுமத்தின் தலைவர் யோகேஷ் தோஷி தனது 64 அபார்ட்மெண்ட்கள் கொண்ட முழு குடியிருப்பு கட்டிடத்தையும் துபாயில் சிக்கியிருந்த இந்தியர்களுக்காக திறந்து வைத்துள்ளார்.
125 இந்தியர்களுக்கு தங்குமிடம்
இந்த வசதி முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த முயற்சி Indian People's Forum UAE மற்றும் துபாயில் உள்ள இந்திய தூதரகத்துடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டதாக தோஷி தெரிவித்தார். இதன் மூலம் குழந்தைகள் உட்பட குடும்பங்களாக இருந்த 125-க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இந்த கடினமான காலத்தில் தற்காலிக தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளது.
வளைகுடாவில் நிலவும் பதற்றத்தால் தவித்த இந்தியர்கள் சிலர் இது குறித்து கூறுகையில், இந்த உதவி மிகவும் முக்கியமான நேரத்தில் கிடைத்ததாக தெரிவித்தனர். மோகித் வாச்சானி, ரியா மகாடியா, பராஸ் பாலோடியா மற்றும் கிரிஷ்மா பாலோடியா ஆகியோர் கூறியதாவது:- "எங்கள் ஹோட்டல் முன்பதிவு முடிந்துவிட்டது. அதை மேலும் நீட்டிக்க முடியவில்லை.
இலவச தங்கும் வசதி மற்றும் உணவு
பயணம் செய்ய தெளிவான வாய்ப்புகளும் இல்லை. இதனால் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்தோம். அப்போது இந்த தங்குமிடம் குறித்து தகவல் கிடைத்தது. அது எங்களுக்கு பெரிய நிம்மதியை அளித்தது," என்றனர். மேலும், பிராந்திய பதற்றம் காரணமாக தொடர்ந்து மொபைல் போன்களில் பாதுகாப்பு எச்சரிக்கைகள் வந்ததால் அவர்கள் பதற்றத்தில் இருந்ததாகவும் தெரிவித்தனர்.
இதேபோல, துபாயிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அஜ்மான் நகரிலும் இந்தியர்களுக்கு தங்குமிடம் வசதி செய்யப்பட்டுள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் தொழிலதிபர் தீரஜ் ஜெயின் தனது பெரிய பண்ணை வீட்டை தற்காலிக தங்குமிடமாக மாற்றியுள்ளார்.
வீடு திரும்ப முடியாமல் பணமோ தங்குமிடமோ இல்லாமல் தவித்த பயணிகளுக்கு இங்கு இலவச தங்கும் வசதி மற்றும் உணவு வழங்கப்படுகிறது. மேலும், சிக்கியிருந்த பயணிகளை ஹோட்டல்கள் மற்றும் பிற இடங்களில் இருந்து கொண்டு வருவதற்காக 6 ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை உட்பட மொத்தம் 11 கார்களையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications