துபாய்க்கு விழுந்த மரண அடி.. மத்திய கிழக்கு மோதலால் பெரிய நஷ்டம்.. இனி பழையபடி வருவதே கஷ்டம் தான்
துபாய்: மத்திய கிழக்கில் இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. இந்த போர் பெரிதாக வெடிக்கும் சூழலில், இதில் அதிகம் பாதிக்கப்படும் நகரங்களில் ஒன்றாகத் துபாய் மாறி இருக்கிறது. துபாய்க்கு இந்த போரில் எந்தவொரு பங்கும் இல்லை என்றாலும் கூட போரால் மிக மோசமாகப் பாதிக்கப்படும் ஊராகத் துபாய் மாறிவிட்டது.
மத்திய கிழக்குப் போர் 16வது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரான் தாக்குதல்களால் அந்த பிராந்தியம் முழுவதும் பதற்றத்தில் உள்ளது. அமெரிக்கத் தளங்கள் இருக்கும் அண்டை நாடுகள் மீது ஈரான் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருகின்றன. துபாயின் மெரினா, அல் சுஃபு பகுதிகளில் பெரும் சத்தங்கள் கேட்டன.

மத்திய கிழக்கு
ஃபுஜைரா எண்ணெய் முனையமும் கூட தனது ஆபரேஷனை நிறுத்தியது. குவைத் சர்வதேச விமான நிலையத்திலும் பல ட்ரோன்கள் தாக்கியுள்ளன. இருப்பினும், அங்குப் பெரியளவில் சேதம் இல்லை எனத் தெரிகிறது. ஃபுஜைராவில், தீயை அணைக்கும் பணிகள் பல மணி நேரம் நீடித்து வருகிறது. இதனால் அங்கு கரும்புகை சூழ்ந்தது. இதில் ஜோர்டான் நாட்டை சேர்ந்த ஒருவர் காயமடைந்தார்.
துபாய்
துபாயை நோக்கியும் ஈரான் வரிசையாகப் பல டிரோன்களை அனுப்பி வருகிறது. இதைத் துபாய் இடைமறித்துத் தாக்கி அழித்து வருகிறது. இதனால் துபாய் முழுக்க ஆங்காங்கே தொடர்ச்சியாக வெடிச் சத்தங்கள் கேட்டு வருகின்றன. கடந்த இரு நாட்களாகவே அங்கு மீண்டும் ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் வருவது அதிகரித்துவிட்டன.
ஈரானின் 90 சதவீத எண்ணெய் வர்த்தகத்தைக் கையாளும் முக்கிய கார்க் தீவை அமெரிக்கா தாக்கியதை அடுத்துத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. கார்க் தீவு மீது தாக்குதல் நடத்தியதை அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. இருப்பினும், அங்குள்ள ராணுவ இலக்குகளை மட்டுமே அழித்ததாகவும் எரிசக்தி வசதிகளை விட்டுவிட்டோம் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
தாக்குதல்கள்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஈரான் 1,600 ட்ரோன்கள், 294 பாலிஸ்டிக், 15 க்ரூஸ் ஆகியவற்றை ஏவியுள்ளது. இதில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 141 பேர் காயமடைந்துள்ளனர். சனிக்கிழமை மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது 9 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 33 ட்ரோன்கள் ஏவப்பட்டன. இப்படி அமீரகத்தை நோக்கி வரிசையாக டிரோன்கள், ஏவுகணைகள் வந்து கொண்டே இருக்கிறது.
துபாய் பாவம்
இது உலகிலேயே பாதுகாப்பான புகலிடங்களில் ஒன்று என்ற அமீரகத்தின் பிம்பத்தை காலி செய்வதாக இருக்கிறது. நிலையைச் சமாளிக்க அமீரகம் தொடர்ச்சியாகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உறுதி செய்யப்படாத தகவல்களைப் பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல பாதுகாப்பு அல்லது முக்கிய தளங்களைப் படமெடுக்கவோ பகிரவோ வேண்டாம் என காவல்துறை எச்சரித்தது. தாக்குதல் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..
துபாய்க்கு இப்போது திரும்பிய பக்கமெல்லாம் அடி என்ற ஒரு சூழலே இருக்கிறது. ஒரு பக்கம் அதன் முக்கிய வருவாயான கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல துபாய் கடந்த சில ஆண்டுகளாகச் சுற்றுலாவை மேம்படுத்தி வந்த சூழலில், மத்திய கிழக்கு மோதல்களால் சுற்றுலா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நீண்ட கால விசா எடுத்து வந்த வெளிநாட்டவரும் கூட மொத்தமாக வெளியேறிவிட்டனர். இப்படி எல்லா பக்கமும் இந்த போரால் துபாய் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications