ஏடிஎம்-இல் தங்கம்.. ஒட்டகத்தின் மீது ரோபோ.. சூப்பர் காருக்குள் சர்ப்ரைஸ்.! வாவ் துபாய் மிரள வைக்குதே
துபாய்: ஐக்கிய அமீரகத்தின் ஒரு அங்கமாக இருக்கும் துபாயில் திரும்பிய பக்கமெல்லாம் நமக்கு ஆச்சரியம் தான் இருக்கும். ஒரு பக்கம் வானுயர்ந்த கட்டிடங்கள் இருக்கும்.. மற்றொரு பக்கம் தங்க கட்டிகளைக் கொடுக்கும் ஏடிஎம் இருக்கும் என புதுமையின் உச்சமாக இருக்கிறது. இதையும் தாண்டி துபாயில் இருக்கும் சில சர்ப்ரைஸ் விஷயங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
மத்தியக் கிழக்கில் இருக்கும் முக்கிய நகரங்களில் ஒன்று துபாய். ஐக்கிய அமீரகத்தின் அங்கமாக இருக்கும் துபாய் இன்று உலகின் பவர்புல் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இப்போது துபாயில் வசிப்பவர்களில் சுமார் 15 சதவிகிதம் பேர் மட்டுமே எமிராட்டி குடிமக்கள். மீதமுள்ளவர்கள் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்களாகும்.

துபாய் என்றாலே நமக்கு வானுயரத்தில் இருக்கும் கட்டிடங்கள், பாலைவனங்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால், அதைத் தாண்டியும் பல அதிசயங்கள் துபாயில் இருக்கிறது. அப்படி அங்கிருக்கும் வியக்கவைக்கும் 10 விஷயங்களை நாம் பார்க்கலாம்.
1. வருமான வரி இல்லை
உலகெங்கிலும் இருந்து பலரும் துபாய்க்கு செல்ல முக்கிய காரணம் இதுதான். துபாயில் வசிக்கும் எந்தவொரு நபரும் தனிநபர் வருமான வரி செலுத்தத் தேவையில்லை. உலகம் முழுவதிலுமிருந்து வரும் தொழில் வல்லுநர்களுக்கும், தொழில்முனைவோரும் அங்கு செல்ல விரும்ப இதுவே காரணம். இதன் மூலமாகவே துபாய் பல திறமையாளர்களை ஈர்க்கிறது.
2. உலகின் உயரமான கட்டிடம்
உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா குறித்து நாம் தனியாகச் சொல்லத் தேவையில்லை.. 828 மீட்டர் (2,717 அடி) உயரத்தில் கம்பீரமாக நிற்கும் புர்ஜ் கலீஃபா, உலகின் மிக உயரமான கட்டிடமாக இருக்கிறது. பாலைவனத்தில் பூக்கும் சிலந்தி அல்லி மலரை அடிப்படையாகக் கொண்டு இந்த புர்ஜ் கலீஃபாவை வல்லுநர்கள் வடிவமைத்துள்ளனர்.
3. ஒட்டகத்தில் ரோபோ
துபாயில் ஒட்டகப் பந்தயம் காலம்காலமாக நடத்தப்படும். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், இந்த ஒட்டகப் பந்தயத்தை நவீனப்படுத்தியுள்ளனர். ரிமோட் மூலம் ரோபோ கட்டுப்படுத்தப்படும் நிலையில், அங்குள்ள பாலைவனத்தில் ஒட்டகப் பந்தயத்தில் நடக்கிறது.
4. சூப்பர் காருக்குள் சர்ப்ரைஸ்
மிகவும் அதிநவீன கார்களை சூப்பர் கார்கள் என்பார்கள். அதிக விலையுயர்ந்த இதுபோன்ற கார்கள் உலகெங்கிலும் செல்வந்தர்களிடம் மட்டுமே இருக்கும். ஆனால், துபாயில் இந்தக் காரை நீங்கள் அடிக்கடி சாலைகளில் பார்க்கலாம். ஆர்வ மிகுதியில் காருக்குள் பார்த்தால் உங்களுக்கு சர்ப்ரைஸ் இருக்கும். ஏனென்றால் துபாயில் போலீசார் லம்போர்கினி, ஃபெராரி, புகாட்டி போன்ற உலகின் விலையுயர்ந்த சூப்பர் கார்களே பயன்படுத்துகிறார்கள். எனவே, அங்கு சூப்பர் கார்கள் சாலைகளில் ரோந்து பணிகளைச் செய்வதைக் கண்டு ஆச்சரியப்பட வேண்டாம்.
5. செயற்கை தீவுகள்
18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒரு சிறிய மீன்பிடி கிராமமாக இருந்த துபாய், இன்று ஒரு உலகளாவிய பெருநகரமாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக துபாயில் எண்ணெய் வளம் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு, அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட துபாய் இன்று இவ்வளவு பெரிய நாடாக மாறியிருக்கிறது. சாதாரண மீன்பிடி கிராமமாக இருந்த துபாய் இப்போது செயற்கை தீவுகளையே உருவாக்கியுள்ளது. இது அறிவியலின் உச்சமாக இருக்கிறது.
6. அதிநவீன மெட்ரோ
உலகின் மிக நீண்ட ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் அமைப்பை துபாய் கொண்டுள்ளது. சிவப்பு மற்றும் பச்சை என இரண்டு வழித்தடங்களில் 46- 52 கிலோமீட்டர் தூரத்திற்கு வரை இயங்குகிறது. இந்த ரூட்களில் மெட்ரோ தொடர்ச்சியாக இயக்கப்படும் போதிலும், அதில் ஓட்டுநர் யாரும் இருப்பதில்லை. இவ்வளவு பெரிய நெட்வொர்க் ஓட்டுநர் இல்லாமல் செயல்படுவது துபாயில் மட்டும் தான்.
7. கிரேன் தலைநகர்
துபாயில் ஏகப்பட்ட உயரமான கட்டிடங்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்தக் கட்டுமானப் பணிகள் உச்சத்தில் இருந்தபோது, உலகின் மொத்த கிரேன்களில் சுமார் 20 முதல் 25 சதவிகிதம் வரை துபாயில் இருந்தன. இதனால் துபாயை "கிரேன்களின் தலைநகரம்" என்றும் சிலர் அழைக்கிறார்கள்.
8. ஏடிஎம்-ல் தங்கம்
நம்ம ஊரில் ஏடிஎம் மெஷினில் ரூபாய் நோட்டுகள் வரும். ரொக்கத்தை ஏடிஎம் இயந்திரத்தில் எடுக்கவும் போடவும் செய்யலாம். ஆனால், துபாயில் இருக்கும் ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து 24 காரட் தங்கக் கட்டிகள் அல்லது நாணயங்களையே கூட நீங்கள் நேரடியாக எடுக்கலாம். கடைக்குப் போய் வாங்குவதற்குப் பதிலாக இப்படி நேரடியாகவே வாங்கிக் கொள்ளலாம்.
9. உலகின் மிக பெரிய மால்
உலகின் மிகப் பெரிய மால் துபாயில் தான் அமைந்துள்ளது. 1.1 மில்லியன் சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் துபாய் மால் அமைந்துள்ளது. 1,200க்கும் மேற்பட்ட கடைகள், மீன் அருங்காட்சியகம் ஆகியவை இதில் உள்ளன. இது மட்டுமின்றி ஒரு பெரிய பனிச்சறுக்கு மைதானமே இந்த மாலில் உள்ளது. அந்தளவுக்குப் பிரம்மாண்டமாக உலகின் மிகப் பெரிய ஷாப்பிங் வளாகமாக இது திகழ்கிறது.
10. துபாய் மிராக்கிள் கார்டன்
50 மில்லியனுக்கும் அதிகமான பூக்களையும் 250 மில்லியன் தாவரங்களையும் கொண்டுள்ள உலகின் மிகப் பெரிய பூந்தோட்டமாக துபாய் மிராக்கிள் கார்டன் இருக்கிறது. தாவரவியல் பிரிவில் இது அதிசயத்தின் உச்சமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications