சவுதி அரசின் திடீர் தடை.. துபாயிலுள்ள இந்தியர்கள் மீண்டும் நாடு திரும்ப.. தூதரகம் வலியுறுத்தல்
துபாய்: கொரோனா காரணமாகச் சவுதி அரசு விதித்துள்ள போக்குவரத்துக் கட்டுப்பாடு காரணமாக தற்போது துபாயிலுள்ள இந்தியர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என்று இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
உலகெங்கும் கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரவில்லை. அதிலும் பிரிட்டன், தென்னாப்பிரிக்கா நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைகளும் வைரஸ் பரலை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாகப் பல உலக நாடுகளும் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. பிரிட்டன் நாட்டில் உருமாறிய கொரோனா பரவல் காரணமாக, கடந்த டிசம்பர் மாதம் முதல் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு வரும் ஜூன் வரை தொடரவும் வாய்ப்புள்ளதாகப் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாடுகள்
இந்நிலையில், அதிகரிக்கும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து வருபவர்களுக்குச் சவுதி அரசு கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தடை விதித்தது. இந்தியர்கள் பலரும் துபாய் வழியாகவே சவுதி அரேபியா செல்வார்கள். சவுதி அரசின் இந்த உத்தரவால் ஏற்கனவே, துபாயில் தனிமைப்படுத்தும் காலத்தில் உள்ள பயணிகள் குழப்பமடைந்தனர். இருப்பினும், சில நாட்களில் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்திக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில் பயணிகள் துபாயிலேயே தங்கினர்.

இந்திய தூதரகம்
இந்தச் சூழ்நிலையில், துபாயிலுள்ள இந்தியர்கள் மீண்டும் இந்தியா திரும்ப வேண்டும் என்று அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது. மேலும், சவுதி அரசு பயணக் கட்டுப்பாடுகளை முழுவதுமாக விலக்கிக் கொண்டவுடன் தங்கள் பயணங்களைத் திட்டமிட வேண்டும் என்றும் இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் பயணிகள் வெளிநாட்டுப் பயணம் குறித்து தற்போது வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தியர்கள் அதிருப்தி
இந்திய தூதரகத்தின் இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாக ரியாத்திலுள்ள பி.ஏ. ஹமீத் என்ற இந்திய ஆர்வலர் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவிற்குள் இந்தியர்களை அனுமதிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா காரணமாகப் பல மாதங்களுக்கு முன் இந்தியா திரும்பிய இவர்களின் வேலை போய்விட்டதாகவும் தற்போது சவுதிக்குச் சென்றால் மட்டுமே மீண்டும் வேலை கிடைக்கும் என்ற நிலை உள்ளதால் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா பாதிப்பு
சவுதி அரேபியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவல் முற்றிலுமாக கட்டுக்குள் இருந்தது. ஆனால், தற்போது மீண்டும் மெல்ல கொரோனா பரவ தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 353 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு 3.70 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேபோல கொரோனா காரணமாகச் சவுதியில் இதுவரை 6,410 பேர் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications