இந்திய vs துபாய்.. தங்கம் விலை எங்கே குறைவு! எவ்வளவு கம்மி? நாம் எவ்வளவு தங்கத்தை எடுத்து வரலாம்!
துபாய்: நமது நாட்டை சேர்ந்த பலரும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் செல்வார்கள். அப்படி ஐக்கிய அமீரகத்திற்குச் செல்வோர் திரும்பி வரும்போது தங்கத்தை வாங்கி வருவார்கள். ஆனால், துபாயில் இருந்து வருவோர் ஏன் தங்கத்தை வாங்கிவருகிறார்கள்.. அங்கு விலை எவ்வளவு தூரம் குறைவாக இருக்கிறது.. அங்கிருந்து எவ்வளவு தங்கத்தை எடுத்து வரலாம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
தங்கக் கடத்தல் விவகாரத்தில் கன்னட நடிகை ரன்யா ராவ் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். துபாயில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்த ரன்யா ராவ் சுமார் 14.2 கிலோ தங்கத்தைக் கடத்தி வந்துள்ளார். இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தியாவுக்கும் துபாய்க்கும் இடையே தங்கத்தின் விலையில் உள்ள வேறுபாடுகள் குறித்த விவாதமும் எழுந்துள்ளது.

கன்னட நடிகை கைது
மூத்த ஐபிஎஸ் அதிகாரியின் வளர்ப்பு மகளான நடிகை ரன்யா ராவ், தனது ஆடைகளில் தங்கக் கட்டிகளை மறைத்து வந்துள்ளார். அவர் துபாயில் இருந்து தங்கத்தைக் கடத்துவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த காலங்களில் பல முறை அவர் தங்கத்தைக் கடத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் பல முறை துபாய் சென்று திரும்பியுள்ளார். குறிப்பாக இரண்டு வாரத்தில் 4 முறை அவர் துபாய் சென்று திரும்பியுள்ளார். இப்படி அடிக்கடி அவர் மேற்கொண்ட பயணங்களே சந்தேகத்தை எழுப்பியது. அதைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையிலேயே ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார்.
துபாயில் தங்கம் விலை குறைவா?
ஆம், இந்தியாவை விடத் துபாயில் தங்கம் விலை குறைவாகவே இருக்கிறது. துபாய் என்பது நீண்ட காலமாகவே தங்க வர்த்தகத்திற்கான மையமாக இருந்து வருகிறது. இதனால் பெரும்பாலும், இந்தியாவில் உள்ளதை விட அங்குத் தங்கம் விலை குறைவாகவே இருக்கும். நமது நாட்டை விடத் துபாயில் தங்கம் விலை குறைவாக இருக்க சில காரணங்கள் உள்ளன.
காரணங்கள் என்ன
வரி இல்லை: துபாய் தங்கத்தை வாங்கும் போது கூடுதலாக வரி எதுவும் இல்லை.. இதனால் ஒருவரால் எந்தவொரு கூடுதல் வரிகளும் இல்லாமல் மார்க்கெட் விலையில் தங்கத்தை வாங்க முடியும்.
இறக்குமதி வரிகள் இல்லை: இந்தியாவில் தங்கத்தை இறக்குமதி செய்யும்போதும், விற்பனையாளர்கள் தனியாக இறக்குமதி வரி செலுத்த வேண்டும். ஆனால், துபாயில் தங்கத்திற்கு எந்தவொரு இறக்குமதி வரியும் இல்லை.. தங்கம் விலை அங்குக் குறைவாக இருக்க இதுவே பிரதான காரணம்.
கடும் போட்டி: துபாயில் தங்கம் விற்பனையில் ஏகப்பட்ட டீலர்கள் உள்ளனர். அவர்கள் விற்பனையை அதிகரிக்க தங்கள் லாபத்தைக் குறைத்துக் கொண்டு விலையைக் குறைத்து விற்பனை செய்வார்கள். கடந்த கால வரலாற்றைப் பார்த்தோம் என்றால் துபாயில் தங்கச் சந்தைகள் செழித்து இருந்துள்ளது. தங்கத்தைச் சேகரிப்பு, விற்பனை மற்றும் வர்த்தகம் ஆகியவற்றின் மையமாகவே துபாய் இருந்துள்ளது.
எவ்வளவு குறைவு?
ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் கடந்த 2024 செப்டம்பர் 25ம் தேதி, 24 கேரட் தங்கம் ஒரு கிராம் துபாயில் AED 313.66க்கு (இந்திய மதிப்பில் ரூ.7,138.96) விற்பனையானது. மறுபுறம் இந்தியாவில், அதே சமயம் ஒரு கிராம் ரூ. 8,225க்கு விற்பனையானது. அதாவது இந்தியாவை விட துபாயில் ஒரு கிராம் விலை ரூ.1100 குறைவாகவே இருக்கிறது.
இறக்குமதி வரி குறைப்பு
நமது நாட்டிற்குத் தேவையான பெரும்பாலான தங்கம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி தான் செய்யப்படுகிறது. இதனால் நமக்குக் கணிசமான அளவுக்கு அந்நிய செலாவணி செலவாகிறது. இதன் காரணமாக ஏற்படும் பொருளாதார தாக்கங்களை நிர்வகிக்க, மத்திய அரசு கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதத்திற்கு முன்பு வரை தங்க இறக்குமதிக்கான சுங்க வரி 15 சதவிகிதமாக இருந்தது. ஜூலை மாதம் தாக்கலான பட்ஜெட்டில் தான் இறக்குமதி வரி 6 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
இறக்குமதி வரி 15%ஆக இருந்த போது தங்கக் கடத்தல் அதிகமாக இருந்ததாகப் பலரும் குற்றஞ்சாட்டினர். தங்கக் கடத்தலைக் குறைத்து சட்டப்பூர்வ இறக்குமதியை அதிகரிக்கவே மத்திய அரசு வரியைக் குறைத்தது. மத்திய அரசு வரியைக் குறைத்தபோது நமது நாட்டிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
சட்ட ரீதியான சிக்கல்
இது ஒரு பக்கம் இருக்க வெளிநாடுகளுக்குச் சென்று திரும்புவோர் எந்தளவுக்குத் தங்கத்தைக் கொண்டு வரலாம் என்பதிலும் பல கட்டுப்பாடுகள் உள்ளன. சட்டச் சிக்கல்களைத் தவிர்க்கச் சுற்றுலாப் பயணிகள் இந்த விதிகளைத் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாகத் துபாய் சென்று திரும்புவார் அங்குத் தங்கம் விலை குறைவு என அதிகமாக வாங்கிவிட்டால் இந்தியாவுக்குள் வரும் போது தேவையில்லாத சட்டச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.
ஆண் பயணிகள் சுங்க வரி எதுவும் இல்லாமல் அதிகபட்சம் 20 கிராம் வரை எடுத்து வரலாம்.. அதன் மதிப்பு அதிகபட்சமாக ரூ.50,000க்குள் இருக்க வேண்டும். மறுபுறம் பெண் பயணிகளைப் பொறுத்தவரை அவர்கள் ரூ.100,000 மதிப்புள்ள 40 கிராம் தங்கத்தை வரி இல்லாமல் கொண்டு வரலாம். இதைத் தாண்டி கூடுதல் தங்கத்தை எடுத்து வந்தால் அதற்கான வரியைத் தனியாகச் செலுத்த வேண்டும்.












Click it and Unblock the Notifications