இப்ப போய் இப்படி பண்ணலாமா? கடைசி நேரத்தில் இந்திய வீரர் ஆப்சென்ட்... பாக் மேட்சுக்கு முன் சலசலப்பு
துபாய்: பாகிஸ்தானுக்கு எதிரான டிடி 20 உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு நேற்று இந்திய அணி வீரர்கள் தீவிரமாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இதில் முக்கியமான இந்திய வீரர் ஒருவர் கலந்து கொள்ளாதது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக இன்று இந்திய அணி உலகக் கோப்பை டி 20 ஆட்டத்தில் ஆட உள்ளது. முதல் போட்டியிலேயே இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளதால் இன்றைய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை இந்தியா பாகிஸ்தான் இடையே 8 முறை டி 20 போட்டிகள் நடந்துள்ளன. அதில் 7 முறை இந்தியா வென்றுள்ளது. 1 முறை மட்டுமே பாகிஸ்தான் வென்றுள்ளது.

பவுலிங்
பாகிஸ்தான் அணிக்கு எதிராக இன்று ஆடும் இந்திய அணியில் எத்தனை பேர் பவுலிங் செய்வார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. பும்ரா, வருண், ஷமி (அல்லது புவனேஷ்வர்குமார்), ஜடேஜா ஆடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதனால் மொத்தமாக இந்திய அணியில் 4 பவுலர்கள் கண்டிப்பாக பவுலிங் செய்வார்கள். 5வது பவுலர் யார் என்ற குழப்பம் உள்ளது.

4 பவுலர்கள்
5வது பவுலராக ஷரத்துல் தாக்கூர் அல்லது அஸ்வின் களமிறங்க வாய்ப்பு உள்ளது. இன்னொரு பக்கம் பாண்டியா இந்திய அணியில் ஆடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. நேற்று கோலியும் கூட பாண்டியா ஆடுவது குறித்து பேசி இருந்தார். ஹர்திக் பாண்டியா ஒரு கட்டத்தில் இந்திய அணிக்கு 2 ஓவர்களை வீச கூடிய திறன் கொண்டவராக இருப்பார். அதே சமயம் பேட்ஸ்மேனாக ஹர்திக் பாண்டியா எங்களுக்கு மிக முக்கியமான வீரர், என்று கோலி குறிப்பிட்டு இருந்தார்

பாண்டியா
ஆனால் இன்று பாண்டியா பவுலிங் செய்வாரா என்பது சந்தேகமாக உள்ளது. கடந்த 2 வருடத்தில் இவர் அதிகபட்சம் 10 ஓவர்கள் பவுலிங் செய்து இருப்பார். 2019ல் உலகக் கோப்பை தொடருக்கு பின் இவரின் காலில் சர்ஜரி செய்யப்பட்டது. அதன்பின் பாண்டியா பவுலிங் செய்வதை நிறுத்திவிட்டார். பின்னர் ஆஸ்திரேலியா டி 20 தொடர் உள்ளிட்ட சில தொடர்களில் மட்டும் 2 -3 ஓவர்களை பாண்டியா வீசினார்.

பவுலிங் பாண்டியா
அதன்பின் எங்கும் ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்யவில்லை. அவ்வப்போது வலைப்பயிற்சியில் மட்டுமே இவர் பவுலிங் செய்தார். இந்த நிலையில்தான் நேற்று வலைப்பயிற்சியில் பாண்டியா கலந்து கொள்ளவில்லை. இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தை முன்னிட்டு நேற்று வலைபயிற்சி செய்தனர். தேவையற்ற காயங்களை தவிர்க்க வேண்டும் என்பதால் பவுலர்கள் சில ஓவர்களை மட்டுமே வீசி பயிற்சி செய்தனர்.

வலைப்பயிற்சி
மற்றபடி பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் பயிற்சி மேற்கொண்டனர். ஆனால் ஹர்திக் பாண்டியா நேற்று நாள் முழுக்கவே பயிற்சி செய்யவில்லை. நேற்று வலைபயிற்சி என்பது கட்டாயமான பயிற்சி கிடையாது. விருப்பம் இல்லை என்றால் ஓய்வு எடுக்கலாம். ஆனாலும் எல்லா வீரர்களும் குறைந்தது சில மணி நேரங்களாவது பயிற்சி எடுத்தாலும் ஹர்திக் பாண்டியா மட்டும் இந்த பயிற்சிக்கு வரவில்லை.

கேள்வி?
ஏற்கனவே அவரின் பவுலிங் தொடங்கி பேட்டிங் வரை எல்லாம் பிரச்சனையாக இருக்கும் நிலையில் சரியாக பாகிஸ்தான் போட்டிக்கு முதல் நாள் அவர் பயிற்சியை தவிர்த்தது பெரிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஒருவேளை ஹர்திக் பாண்டியா இன்றைய ஆட்டத்தில் ஆடவில்லையே என்ற கேள்வியையும் இது எழுப்பி உள்ளது.

பேட்ஸ்மேன்
சரியாக பாகிஸ்தான் ஆட்டத்திற்கு முதல்நாள் இவர் இப்படி செய்தது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. தனிப்பட்ட வகையில் ஓய்வு தேவை என்பதால் இப்படி பயிற்சிக்கு அவர் வராமல் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இன்று ஒருவேளை ஹர்திக் பாண்டியா ஆடாத பட்சத்தில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் இறங்க வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications