துபாய் ஏர்போர்ட் மீது தாக்குதல்.. இந்தியர் ஒருவர் உட்பட 4 பேர் காயம்! உச்சத்தை எட்டும் ஈரான் போர்
துபாய்: ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இதர வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று துபாய் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், ஓர் இந்தியர் உட்பட 4 பேர் காயமடைந்திருக்கின்றனர்.
துபாய் சர்வதேச விமான நிலையத்தின் அருகே 2 ட்ரோன்கள் விழுந்து வெடித்தன. இதனால் ஏற்பட்ட தீ மற்றும் அதிர்வு பாதிப்புகளில் 4 பேர் காயமடைந்திருக்கின்றனர்.

ட்ரோன் தாக்குதல்
இது குறித்து துபாய் ஊடக அலுவலகம் தனது x பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "துபாயில் புதன்கிழமை அன்று, விமான நிலையத்திற்கு அருகே ட்ரோன்கள் விழுந்த சம்பவத்தில், ஒரு இந்தியர் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். இதில் இந்திய நாட்டவருக்கு மிதமான காயங்களும், இரண்டு கானா மற்றும் ஒரு பங்களாதேஷ் நாட்டவருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டிருக்கிறது. விமானப் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கி வருகிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியர் காயம்
உலகின் மிகவும் பிஸியான விமான நிலையங்களில் துபாய் விமான நிலையம் முதலிடத்தில் இருக்கிறது. இது மேற்கு நாடுகளையும், கிழக்கு நாடுகளையும் இணைக்கும் முனையமாக செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் போர் காரணமாக பாதிக்கப்பட்டிருப்பது, ஐக்கிய அரபு அமீரகத்தின் சுற்றுலா வருவாயை பாதித்திருக்கிறது.
சிக்கலில் வளைகுடா நாடுகள்
அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் இப்போது வரை அமெரிக்கா சார்பு நிலையில்தான் இருக்கின்றன. எனவே இந்த நாடுகளின் ராணுவ மையங்கள் மற்றும் பொருளாதார மண்டலங்களை குறி வைத்து ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் இடைமறித்து தடுத்துள்ளன. ஆனால் முழுமையாக தடுக்க முடியவில்லை. எனவே துபாய் நகரத்திலிருந்து மொத்த சுற்றுலா பயணிகளும் உடனடியாக வெளியேறியிருக்கின்றனர்.
எரிவாயு தட்டுப்பாடு
எப்போதும் பரபரப்பாக இருக்கும் துபாய் நகரம், தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. மறுபுறம் இந்த மோதல் காரணமாக உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. எனவே ஓட்டல்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications