கேரள நபருக்கு லாட்டரியில் 2 முறை அடித்த யோகம்! இப்படியும் அதிர்ஷ்டம் அடிக்குமா? கொட்டிய கோடிகள்
துபாய்: வாழ்க்கையில் ஒருமுறையாவது லாட்டரியில் பரிசு அடித்துவிடாதா என்ற ஏக்கத்தில் வாழ்நாள் முழுக்க லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி பணத்தை இழந்து வருபவர்களை பொறாமைப்பட வைக்கும் வகையில் கேரள நபர் ஒருவருக்கு ஒருமுறை அல்ல, இரண்டு முறை லாட்டரியில் பரிசு அடித்துள்ளது. கேரளாவை சேர்ந்த மாவ்லே என்ற நபருக்கு, தற்போது மட்டும் 1 மில்லியன் டாலர் பரிசு அடித்துள்ளது. இதனால் அந்த நபர் சந்தோஷத்தின் எல்லைக்கே சென்றுள்ளார்.
வாழ்நாளில் ஒருமுறை லாட்டரியில் அதிர்ஷ்டம் அடித்தால் கூட, தலைமுறையே மாறும் அளவுக்கு செட்டில் ஆகிவிடலாம் என நினைத்துக்கொண்டு வருட கணக்கில் லாட்டரி வாங்கி 100 ரூபாய் கூட பரிசு அடிக்காமல் பணத்தை இழந்தவர்கள்தான் ஏராளம். ஒருசிலருக்கு திடீரென அதிர்ஷ்ட தேவதை கண் விழித்தது போல எதிர்பாராமல் ஒரே ஒருமுறை வாங்கிய லாட்டரிக்கு கூட பணம் கோடிகளில் கொட்டி விடும்.

இரண்டு முறை லாட்டரி பரிசு
வருட கணக்கில் லாட்டரி வாங்கியவர்கள் பலரையும் பொறாமை பட வைக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்து இருக்கும். ஒருமுறை லாட்டரியில் பணம் அடித்தாலே இப்படி என்றால், ஒரே நபருக்கு இரண்டு முறை லாட்டரியில் பணம் அடித்தால் எப்படி இருக்கும். பகல் கனவில் தான் சிலர் இப்படி நினைத்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் உண்மையிலேயே அப்படியான ஒரு சம்பவம் கேரள நபருக்கு நடந்துள்ளது. இது குறித்த விவரம் பார்க்கலாம்.
கேரளாவை சேர்ந்தவர் பால் ஜோஸ் மாவ்லே. 60 வயதான இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். கடந்த பல ஆண்டுகளாக துபாயில் வசித்து வரும் இவருக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. இவர் கடந்த 19 ஆம் தேதி வாங்கிய துபாய் மில்லினியம் மில்லினைர் லாட்டரியில் பம்பர் பரிசாக 1 மில்லியன் டாலர் விழுந்துள்ளது. இந்திய மதிப்பில் இதன் மதிப்பு சுமார் ரூ. 8 கோடியாகும்.
2016 லும் விழுந்த பரிசு
ஒரே டிக்கெட்டில் வாழ்நாளே மொத்தமாக மாறிவிட்டாலும் கூட இவருக்கு இது பரிசு அடித்தது இது முதல் முறை இல்லை. 38 வருடமாக துபாயில் வசித்து வரும் பால் ஜோஸ் மாவ்லேவுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பரிசு அடித்தது. அதன்பிறகு தற்போது மீண்டும் லாட்டரியில் பரிசு அடித்து பலரையும் வியக்க வைத்து வருகிறார்.
இப்படியும் கூட ஒரு மனிதருக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா? என்று வியக்க வைக்கும் அளவுக்கு இவருக்கு பரிசு அடித்துள்ளது. 2016 ஆம் அண்டு இவர் தனது நண்பர்களுடன் இணைந்து டிக்கெட் வாங்கியிருக்கிறார். 17 நண்பர்களுடன் இணைந்து வாங்கிய டிக்கெட்டிற்கு அப்போது பரிசு அடித்ததாம். மாவ்லேவிற்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சைட் சூப்பர்வைசர் ஆக ஒரு சிறிய நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
சென்னை இன்ஜினீயருக்கு பரிசு
தற்போது துபாய் லாட்டரியில் மீண்டும் பரிசு அடித்து இருப்பதால் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார் மாவ்லே. ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் இந்தியாவை சேர்ந்த பலரும் சென்று பணியாற்றி வருகிறார்கள். கேரளா, தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் அங்கு பணியாற்றி வரும் நிலையில், அங்கு விற்பனை செய்யப்படும் லாட்டரிகளை வாங்கி விளையாடுகிறார்கள்.
இதில் ஒரு சிலருக்கு அதிர்ஷ்டம் அடித்து விடுகிறது. கடந்த வாரம் கூட சென்னையை சேர்ந்த இன்ஜினியர் ஒருவருக்கு ரூ.230 கோடி ஐக்கிய அரபு அமீரக லாட்டரியில் பணம் அடித்து இருந்தது. சென்னையைச் சேர்ந்த, இன்ஜினீயரான ஸ்ரீராம் ராஜகோபாலன் ரூ.230 கோடியை (2.7 கோடி அமெரிக்க டாலர்கள்) வென்று இருந்தார். சவுதி அரேபியாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி நடந்த லாட்டரியில் கலந்துகொண்டபோதுதான் இவருக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications