ஒரே மேஜையில்.. எதிரெதிரே ரஷ்ய-உக்ரைன்-அமெரிக்க அதிகாரிகள்! பேச்சுவார்த்தையின் போதே நடந்த சம்பவம்
அபுதாபி: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர, ரஷ்யா-உக்ரைன்-அமெரிக்கா அதிகாரிகள் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கின்றனர். அபுதாபியில் இந்த கூட்டம் நடைபெற்று வரும் வேளையில்.. ரஷ்யாவில் உக்ரைன் பலமான தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த மூன்று நாடுகள் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல் முறை. இப்படி இருக்கையில் விரைவில் தீர்வு எட்டப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால், உக்ரைன் போகிற போக்கை பார்த்தால்.. பிரச்சனை இப்போதைக்கு முடியாது என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இரு நாடுகளும் தாக்குதல்
இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இதற்கிடையில், உக்ரைனின் சபோரிஜியா பிராந்தியத்தில் உள்ள, கொமிஷுவாகா நகர் மீது ரஷ்யா நடத்திய வான்வழி குண்டுவீச்சுத் தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 4 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தகவலை, ஆளுநர் இவான் ஃபெடோரோவ் உறுதிப்படுத்தினார். மேலும், உக்ரைனிய ராணுவம் ரஷ்யாவின் பென்சா பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் கிடங்கு ஒன்றை வெற்றிகரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
ரஷ்யாவின் பதிலடி
ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதல்களால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் மற்றும் வெப்ப வசதியின்றி தவிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, உக்ரைனுக்கு அவசர மின்சாரத்தை அனுப்ப ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடும் குளிர்காலத்தை எதிர்கொள்ள உதவும் வகையில் மின்சாரத்தை அனுப்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. உக்ரேனிய அரசுக்குச் சொந்தமான மின் விநியோக நிறுவனமான உக்ரெனெர்கோ, சமீபத்திய ரஷ்ய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவசரகால மின் வெட்டுக்கள் ஏற்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது.
அமைதி பேச்சுவார்த்தை
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் முயற்சியாக, நவம்பர் 19 அன்று அதிபர் ஜெலென்ஸ்கி துருக்கிக்குச் சென்றார். இதனையடுத்து, அமெரிக்காவும், ரஷ்யாவும் இணைந்து 28 அம்ச சமாதானத் திட்டத்தை வகுத்ததாக செய்திகள் வெளியாகின. டிசம்பர் 2 அன்று, ரஷ்ய அதிபர் புடின் அமெரிக்க சிறப்புத் தூதர் விட்காஃப் மற்றும் டிரம்ப்பின் மருமகன் குஷ்னர் ஆகியோரை கிரெம்ளினில் சந்தித்தார். இந்தச் சந்திப்பு ஆக்கபூர்வமானது என ரஷ்ய தூதர் உஷாகோவ் குறிப்பிட்டார், ஆனால் இன்னும் பல பணிகள் உள்ளன என்றும் தெரிவித்தார்.
இப்படி இருக்கையில் இன்று தொடங்கியுள்ள பேச்சுவார்த்தை வெற்றியடைய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications