பெண்களுக்கு 'ஹார்ட்' அனுப்பினால் ஜெயில் தான்.. இளைஞர்களே கவனம்! இந்த சட்டம் உங்களுக்கு தெரியுமா?
துபாய்: பொதுவாக சாட்டிங் செய்யும் போது இப்போதெல்லாம் டெக்ஸ்டை காட்டிலும் எமோஜிக்கள் தான் அதிகம் பறக்கும். ஆனால், இந்த ஒரு டைம் எமோஜியை அனுப்பினால் சிறைக்குச் செல்வது நிச்சயமாம். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
இந்த நவீன யுகத்தில் எல்லாமே செயலிகள் என்றாகிவிட்டது. முன்பெல்லாம் நாம் யாருடனாவது தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் அவர்களுக்கு நாம் லெட்டர் தான் போடுவோம். இந்த லெட்டர் அவர்களைச் சென்றடையவே சில நாட்கள் ஆகும்.

அதன் பிறகு அவர்கள் பதில் கடிதம் அனுப்பினால் அது நம்மிடம் வந்து சேர பல நாட்கள் வரை ஆகிவிடும். இடையில் நம் மீது இருக்கும் கோபத்தில் போஸ்ட்மேன் எதாவது சம்பவம் செய்தால் கடிதம் கிடைக்காமலேயே போய்விடவும் வாய்ப்புகள் அதிகம்.
சாட்டிங்: ஆனால், இந்த நவீன யுகத்தில் எல்லாமே இன்ஸ்டன்ட் தான். இப்போது வாட்ஸ்அப் போன்ற செயலிகளைக் கொண்ட உலகின் எந்த மூலையில் இருக்கும் நபருக்கும் நம்மால் நொடிகளில் மெசேஞ் அனுப்ப முடியும். இது நமக்கு மிகப் பெரிய உதவியாகவே இருக்கிறது. ஆனால், ஜாலியாக சாட் செய்வதும் மெசேஞ் அனுப்புவதும் கூட உங்களை ஆபத்தில் தள்ளிவிடும்.
சாதாரண எமோஜி அனுப்புவது கூட உங்களை சிறையில் தள்ளிவிடலாம். அதன்படி மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத்தில் வாட்ஸ்அப் அல்லது எந்தவொரு சமூக வலைத்தளம் மூலமும் பெண்ணுக்கு ஹார்ட் ஈமோஜியை அனுப்புவது, இப்போது அங்கே குற்றமாகக் கருதப்படுமாம். மேலும், அப்படித் தப்பித் தவறி மெசேஞ் அனுப்பினாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்களாம்.
சிறை: இது தொடர்பாக குவைத் வழக்கறிஞர் ஹயா அல் ஷலாஹியின் கூறுகையில், "இதுபோன்ற குற்றங்களில் குற்றவாளிகளுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும், 2,000 குவைத் தினாருக்கு மேல் அபராதமும் விதிக்கப்படலாம்" என்று அவர் தெரிவித்தார். 2,000 குவைத் தினார் என்பது இந்திய மதிப்பில் சுமார் 5.35 லட்சம் ஆகும்.
சவுதி: இதேபோல், அண்டை நாடான சவுதி அரேபியாவில், 'ரெட் ஹார்ட்' எமோஜிகளை வாட்ஸ்அப்பில் அனுப்புவதும் தண்டைக்குரிய குற்றமாகப் பார்க்கப்படுகிறது. இதற்காக அங்கும் சிறைத் தண்டனை கிடைக்குமாம்..
சவுதி சட்டப்படி ஹார்ட் எமோஜியை அனுப்பினால்.. இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். மேலும், 1 லட்சம் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்படுமாம். இது இந்திய மதிப்பில் ரூ.21.92 லட்சமாகும். முதல்முறை இந்த வழக்கில் சிக்குவோருக்குத் தான் இந்த அபராதம். ஒருவர் திரும்பத் திரும்ப இந்த குற்றச்சாட்டில் சிக்கினால் அவருக்கு 3 லட்சம் சவுதி ரியால் வரை அபராதம் விதிக்கப்படுமாம். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.63.92 லட்சமாகும். மேலும், 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
என்ன காரணம்: சவுதி நாட்டில் ரெட் ஹார்ட்களை அனுப்புவதும் பெண்கள் மீதான துன்புறுத்தலாகக் கருதப்படுவதால் இந்த கடும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக மெசேஞ் அனுப்பும் போதும், இதுபோன்ற எமேஜிகளை அனுப்பினால் அதை வைத்தே ஒருவரை பிளாக்மெயில் செய்து துன்புறுத்தவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications