புகழ்பெற்ற கஸ்ர் அல் வதனை சுற்றி பார்த்த அரசு பள்ளி மாணவர்கள்! கடைசி வரை கூடவே சென்ற அன்பில் மகேஷ்
துபாய்: அரசுப் பள்ளி மாணவர்களுடன் கல்விச் சுற்றுலா சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுடன் கஸ்ர் அல் வதன் அரண்மனையைச் சுற்றிப் பார்த்தார்.
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் கற்றல் திறனே மேம்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற 68 மாணவர்களைத் துபாய்க்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
துபாயில் தமிழக மாணவர்கள்.. கண்ணும் கருத்துமாக கவனிக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ்! மாணவர்கள் ஹேப்பி
அரசுப் பள்ளி மாணவர்கள்
நேற்று இந்த மாணவ மாணவிகள் விமானம் மூலம் துபாய் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷும் உடன் சென்றார். மாணவர்கள் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்து வருகின்றனர். முதலில் துபாயின் ஜெபல் அலி பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான இந்து கோயிலை அவர்கள் சுற்றிப் பார்த்தார்கள். அதைத் தொடர்ந்து புகழ்பெற்ற லூவர் மியூசியத்திற்கு சென்றனர்.
கஸ்ர் அல் வதன்
அதைத் தொடர்ந்து கஸ்ர் அல் வதன் அரண்மனைக்கு மாணவ மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். இது அந்நாட்டு மன்னரின் அதிகாரப்பூர்வ அரண்மனையாகும். பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் அபுதாபி வரும் போது, இங்கு வைத்து அவர்களை மன்னர் சந்திப்பார். அந்தளவுக்குச் சர்வதேச அளவில் இந்த அரண்மனை முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
அமைச்சர் அன்பில் மகேஷ்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடத்தை அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷும் சுற்றிப் பார்த்தார். அங்கு இருந்த அரசு அதிகாரிகள் அமைச்சர் அன்பில் மகேஷை கவுரவித்தனர். இந்த சிறப்பு வாய்ந்த இடத்தை தங்களுடன் அமைச்சரும் சேர்ந்து சுற்றிப் பார்க்கிறார் என்பதைத் தெரிந்த உடன் மாணவ- மாணவிகள் உற்சாகமடைந்தனர்.
உற்சாகம்
மாணவர்களுடன் கிட்டதட்ட நண்பராகவே மாறி அமைச்சர் அன்பில் மகேஷ் உரையாடினார். மாணவர்கள் அமைச்சருடன் உற்சாகமாகப் பேசிக் கொண்டு இருந்தனர். அமைச்சரும் மாணவ மாணவிகள் கேட்ட கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அதைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற லேசர் ஷோவை அவர் மாணவ மாணவிகளுடன் அமர்ந்து கண்டு ரசித்தார்.