பஹ்ரைன் நாட்டின் உயிர்நாடி.. சவுதி அரேபியா உடன் இணைக்கும் 25 கிமீ பாலம்.. உடனடியாக மூடப்பட்டது
துபாய்: அமெரிக்க கடற்படையின் 5-வது கப்பற்படை தளம் அமைந்துள்ள பஹ்ரைன் நாட்டையும், சவுதி அரேபியாவும் சாலை வழியாக இணைக்கும் 25 கிலோ மீட்டர் நீளமுள்ள ஒரே கடல்வழி பாலத்தை ஈரான் தகர்க்கும் அபாயம் எழுந்துள்ளது. ஈரானின் அச்சுறுத்தல் காரணமாக பாலம் மூடப்பட்டுள்ளது. இந்த பாலம் தான் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில் துறை என பல வகையில் பஹ்ரைனுக்கு உயிர்நாடியாக செயல்பட்டு வருகிறது.
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்குமாறு ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கெடு விதித்துள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்குள் ஈரான் திறக்கவில்லை என்றால், ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது குண்டுவீசப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். இதனால் ஈரானும் பதில் தாக்குதல் நடத்தும் என்ற அச்சம் உள்ளது. ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல்கள் காரணமாக, சவூதி அரேபியாவையும் பஹ்ரைன் தீவு தேசத்தையும் இணைக்கும் முக்கிய பாலமான 'கிங் ஃபஹத் காஸ்வே'இன்று அதிகாலை மூடப்பட்டது. பஹ்ரைனின் கிங் ஃபஹத் காஸ்வே ஆணையம் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில் இந்த அறிவிப்பைத் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் ஈரானியத் தாக்குதல்கள் காரணமாக, "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக" வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க கடற்படையின் 5-வது கப்பற்படை தளம் அமைந்துள்ள பஹ்ரைனை, அரேபிய தீபகற்பத்துடன் சாலை வழியாக இணைக்கும் ஒரே தொடர்பு இந்த 25 கிலோமீட்டர் நீளமுள்ள பாலம் தான் 'கிங் ஃபஹத் காஸ்வே'. இது 1986-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திறக்கப்பட்டது. இது சவூதி அரேபியாவின் அல்-கோபர் நகரத்தையும், பஹ்ரைனின் அல்-ஜஸ்ரா பகுதியையும் இணைக்கும் வகையில் சுமார் 25 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கை போன்ற தீவு நாடு தான் பஹ்ரைன்.. எனவே உலக சந்தையுடன் தொடர்புகொள்ளவும், சவூதி அரேபியாவின் பெரிய சந்தையைப் பயன்படுத்தவும் இந்த பாலம் ஒரு முக்கியப் பாதையாக உள்ளது. சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில் துறைகளில் இது ஒரு உயிர்நாடியாக செயல்பட்டு வருகிறது.

வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான சவூதி மக்கள் பஹ்ரைனுக்குச் செல்வதும், பஹ்ரைன் மக்கள் சவூதிக்குச் செல்வதும் வழக்கமாகும். இந்த பாலம் இரு நாட்டு மக்களிடையேயான சமூக மற்றும் கலாச்சார பிணைப்பு போல் செயல்பட்டு வருகிறது. பஹ்ரைனில் அமெரிக்கக் கடற்படையின் 5-வது கப்பற்படை தளம் இருக்கிறது. இந்தப் பாலம் தான் அமெரிக்காவின் ராணுவ தளத்திற்கு முக்கியமான பாதுகாப்பு பாலமாகவும் இருக்கிறது.
கிங் ஃபஹத் காஸ்வே வெறும் பாலம் மட்டுமல்ல, அது கடலுக்கு அடியில் நிலப்பரப்பை மாற்றியமைத்த ஒரு பொறியியல் அதிசயம் ஆகும். இந்தப் பாலம் முழுக்க முழுக்க முன்வார்ப்பு கான்கிரீட் மற்றும் எஃகு கொண்டு கட்டப்பட்டது. 25 கி.மீ நீளமுள்ள இந்தப் பாதையில், கடலுக்கு நடுவில் 7 செயற்கை தீவுகள் உருவாக்கப்பட்டன. இவை பாலத்திற்குத் தேவையான பலத்தைத் தருவதோடு, வாகனங்கள் நிறுத்தவும், எல்லைக் கட்டுப்பாட்டு அலுவலகங்களாகவும் செயல்படுகின்றன. ஆழ்கடலில் பிரம்மாண்டமான கான்கிரீட் தூண்கள் ஊன்றப்பட்டன. சில இடங்களில் கடல் மட்டத்திலிருந்து 40 மீட்டர் ஆழம் வரை இந்தத் தூண்கள் இருக்கின்றன. கரையில் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட பாலத்தின் பகுதிகள், பிரம்மாண்டமான மிதவை கிரேன்கள் மூலம் கடலுக்குக் கொண்டு செல்லப்பட்டு, தூண்களின் மீது சரியாகப் பொருத்தப்பட்டன.
பொதுவாகவே வளைகுடா கடலில் உப்பின் அளவு மிக அதிகம். இது கான்கிரீட்டிற்குள் இருக்கும் எஃகு கம்பிகளை மிக வேகமாக அரித்துவிடும். இதைத் தடுக்க, சிறப்பு வகை கான்கிரீட் மற்றும் எஃகுக்கு பாதுகாப்பு பூச்சுகள் பயன்படுத்தப்பட்டது. கடும் காற்று, மணல் புயல்கள் மற்றும் சீரற்ற கடல் அலைகளுக்கு மத்தியில் பெரிய போராட்டத்திற்கு பின்னரே பாலம் கட்டப்பட்டது. 3,50,000 கியூபிக் மீட்டர் கான்கிரீட் மற்றும் 47,000 டன் எஃகு இந்த பாலம் கட்ட பயன்படுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications