துபாய் செல்கிறார் ராகுல் காந்தி.. பிரமாண்ட வரவேற்பு கொடுக்கிறது திமுக
துபாய்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துபாய் செல்லவுள்ளார். இதையொட்டி அங்கு சிறப்பான ஏற்பாடுகளில் திமுகவும் இறங்கியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகங்களுக்கு ராகுல் காந்தி ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் வருகை தருகின்றார். ஜனவரி 11 ஆம் தேதி மகாத்மா காந்தியுடன் 150 வருடங்கள் என்ற தலைப்பில் ஐக்கிய அரபு அமீரகங்கள் வாழ் இந்தியர்கள் இடத்தில் துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அவர் உரையாற்றுகின்றார்.
அமீரகங்கள் வருகை தரும் ராகுல் காந்திக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கவும், துபாயில் நடக்கும் விழாவை மிகப் பிரமாண்டமான அளவில் நடத்தவும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர்கள் மற்றும் ஓவர்சீஸ் காங்கிரஸ் நிர்வாகிகள் அங்கு முகாமிட்டு அது தொடர்பான வேலைகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
விழா ஏற்பாடுகளுக்கான ஆலோசனை கூட்டம் அமீரக திமுக தலைவர் அரிகேசவநல்லூர் எஸ். எஸ் மீரான் தலைமையில் துபாயில் நடைபெற்றது.
இவ்விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஹிமான்ஸூ வியாஸ் ராகுல் காந்தியை பிரதம வேட்பாளராக முதலில் முன்மொழிந்த தலைவர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பாராட்டி பேசினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துபாய் பிரிவு தலைவர் பண்ருட்டி ஷம்ஸூத்தீன் வரவேற்புரையாற்றினார் . ஹிமான்ஸு வியாஸ் பேசுகையில், ஸ்டாலின் முயற்சிக்கு வலு சேர்க்கும் விதமாக துபாயில் உள்ள அனத்துத் திமுகவினரும் மற்றும் தமிழர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமீரகங்கள் வருகை தரும் ராகுல்காந்திக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கவும் இவ்விழாவை மிகப் பிரமாண்டமான அளவில் நடத்த ஒத்துழைப்பு கொடுக்குமாறும் கேட்டுகொண்டார்..
தொடர்ந்து அவர் பேசுகையில், ராகுல் காந்தியின் துபாய் விஜயம் இந்திய அரசியலில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியாவில் மஹாத்மா காந்தியின் கொள்கைகள் நிலைநிறுத்தப்பட ராகுல் காந்தியின் தலைமை அவசியம். பல்வேறு கலாச்சார இனமொழி மக்களைக் கொண்ட இந்தியாவில் அனைத்து மக்களும் சுபிட்சமாகவும் அமைதியுடனும் பயமின்றியும் வாழ்வதற்கு ராகுல் காந்தியின் தலைமை வழிகாட்டும். ராகுல் காந்தியின் துபாய் கூட்டத்தை பிரம்மாண்ட மாநாடாக நடத்திட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் ஓவர்சீஸ் காங்கிரஸ் செயலாளர் டாக்டர் (செல்வி) ஆர்த்தி கண்ணா , ஐக்கிய அரபு அமீரகங்கள் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் புஷ்பகாரன் , ஓவர்சீஸ் காங்கிரஸ் ராமச்சந்திரன், தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு டாக்டர் அமீர் கான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் அமீரக திமுக துணைத்தலைவர்கள் சிம்ம பாரதி, முஸ்தாக், செந்தில், அமீரக திமுக செயாலாளர் முஸ்தபா , துணைச் செயாளர்கள் அழகேசன், மசூது, பொருளாளர் இளயராஜா சுவாமிநாதன் மற்றும் துபாய் தமிழ்ச் சங்கம் ஜெயந்தி மாலா சுரேஷ், காயிதே மில்லத் பேரவை முஹம்மது தாஹா, பரக்கத் அலி , அமீரகத் தமிழ் மன்றம் ஆசிப் மீரான், ஜெஸிலா பானு, தமுமுக ஹாதி, எஸ் டி பி ஐ முபாரக் , அபுதாபி அபுதாபி அமீரகத் தமிழ் மன்றம் ஃபிர்தவ்ஸ் பாட்ஷா, உதயநிதி ஸ்டாலின் மன்றம் பாலா, மதிமுக பாலா தமிழ்த்துளி பிரியா, ரிதம் சபேசன், தமுமுக ஹாதி, எஸ் டி பி ஐ முபாரக் , வஹிதா ஜைடி, முத்தநிழ் சங்கம், மோகன் பிள்ளை , ஷா, ஆகியோர் கலந்து கொண்டு விழாவை பிரம்மாண்ட மாநாடு போல் வெற்றிகரமாக நடத்த கருத்துரை வழங்கினர்.
அமீரக காயிதே மில்லத் பேரவை எஸ்.கே.எஸ். ஹமீதுர் ரஹ்மான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.