உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு விழா கொண்டாட்டம்! துபாயில் கேக் வெட்டிய அமீரகத் திமுக!
துபாய்: தமிழக விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதை ஒட்டி துபாயில் அமீரகத் திமுக சார்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
அமீரக திமுக பொறுப்பாளர் எஸ்.எஸ்.மீரான் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமீரகம் வாழ் திமுகவினர் திரளாக கலந்துகொண்டனர்.
இது தொடர்பான விவரம் வருமாறு;
சார் PET பிரியட்டில் பாடம் எடுக்கிறாங்க.. மாணவி புகாருக்கு அமைச்சர் உதயநிதி அசத்தல் பதில்! ஆரவாரம்
உதயநிதி பதவியேற்பு
திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்றதொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதை முன்னிட்டு,நேற்று மாலை 7 மணியளவில் துபாய் லேண்ட்மார்க் ஹோட்டல் வளாகத்தில் அமீரக திமுக அமைப்பாளர் எஸ்.எஸ்.மீரான் தலைமையில் கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருநெல்வெலி மாவட்ட தலைவர் எல்.கே.எஸ் மீரான் கலந்து கொண்டார்.
அரசியல் பாதை
அதில் பேசிய அவர் திராவிட முன்னேற்ற கழகம் கடந்து வந்த அரசியல் பாதையையும் அது கடந்து சவால்கள்களையும் நினைவுப்படுத்தி நிகழ்கால அரசியலுக்கு தேவையான பல்வேறு விஷயங்களை அமைச்சர் உதயநிதி முன்னெடுத்து வருவதாக கூறினார். அவரைத் தொடர்ந்து அந்த நிகழ்வில் பேசிய அமீரக எழுத்தாளர் ஆசீஃப் மீரான், திராவிட இயக்கத்தை பற்றியும், முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டு வரும் மக்கள் பணிகள் குறித்தும் பட்டியலிட்டார்.
அமீரக திமுக
இவர்களை தொடர்ந்து பேசிய அமீரக திமுக பொறுப்பாளர் எஸ்.எஸ்.மீரான், உதயநிதி ஸ்டாலினின் உழைப்பையும், செயல்பாட்டையும் குறிப்பிட்டார். ஒற்றை செங்கல் மூலம் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டவர் அமைச்சர் உதயநிதி என புகழாரம் சூட்டினார். இந்த கொண்டாட்ட நிகழ்வை ஏஜிஎம் பைரோஸ் கான் தொகுத்து வழங்கிய நிலையில், கடையநல்லூர் முஸ்தஃபா, பிலால் அலியார், அழகேசன்,பாலாஜி பாஸ்கரன், இளமுருகன்,இஞ்சினியர் பாலா,ரெங்கராஜன், பெனாஸீர், காயிதேமில்லத் பேரவை பரக்கத் அலி, பிரசன்னா, ஜஃபருல்லாஹ்,உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற நிர்வாகி பாலா,ஷேக் தாவுது,பருத்தி இக்பால், உள்ளிட்ட அமீரக திமுகவினர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
கட்சி மீதான பற்று
இதனிடையே நிகழ்ச்சியின் நிறைவாக கேக் வெட்டப்பட்டதுடன் அனைவருக்கும் அது பகிர்ந்தும் அளிக்கப்பட்டது. கடல் கடந்து பணியாற்றச் சென்ற இடத்திலும் கட்சி மீதான பற்று சற்றும் குறையாமல் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.