இந்திய விங் கமாண்டருக்காக.. நிகழ்ச்சியை ரத்து செய்த அமெரிக்க விமானப்படை! துபாயில் நெகிழ்ச்சி!
துபாய்: துபாய் ஏர் ஷோவில், சாகசத்தில் ஈடுபட்டிருந்த தேஜஸ் ரக விமானம் விபத்தில் சிக்கியது. விபத்தில் இந்திய விங் கமாண்டர் நமன்ஷ் சியால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவரது மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக துபாய் ஏர் ஷோவில் நாங்கள் நிகழ்ச்சியை நடத்த மாட்டோம் என்று அமெரிக்க விமானப்படை பிரிவின் கமாண்டர் அறிவித்திருக்கிறார்.
துபாயின் அல் மக்தூம் சர்வதேச விமான தளத்தில் ஏர் ஷோ நடைபெற்று வருகிறது. உலகில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த விமானப்படை நிறுவனங்கள் தங்கள் வலிமையை இந்த ஷோவில் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும். இதன் மூலம் விமானம் தயாரிப்பில் வேறு சில நாடுகளோடு ஒப்பந்தத்தை எட்ட முடியும். அதேபோல தங்கள் நாட்டின் விமானத்தை விற்கவும் இந்த ஏர் ஷோ பயன்படுத்தப்படுகிறது.

இப்படி இருக்கையில் கடந்த 21ம் தேதி இந்த ஏர் ஷோவில் தேஜஸ் விமானத்தில் இந்திய விமானப்படையின் வலிமையை விங் கமாண்டர் நமன்ஷ் சியால் வெளி உலகத்திற்கு காட்டிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் விங் கமாண்டர் உயிரிழந்தார். அவரது உடல் நேற்று கோயம்புத்தூர் வழியாக சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முழு ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக ரஷ்ய விமானப்படை, 'Missing Man Formation' முறையில் வானில் விமானத்தில் பறந்து, இந்திய விங் கமாண்டருக்கு இறுதி அஞ்சலியை செலுத்தியது. இதனையடுத்து தற்போது அமெரிக்க விமானப்படை, இந்திய விங் காமாண்டருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக துபாய் ஏர் ஷோவில் தங்கள் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறது.
அமெரிக்க விமானப்படையின் F-16 வைப்பர் டெமான்ஸ்ட்ரேஷன் குழுவின் கமாண்டர், மேஜஸ் டெய்லர் ஃபெமா ஹீஸ்டர் இது குறித்து கூறுகையில், "விபத்து நடந்த பின்னரும் துபாய் ஏர் ஷோ அமைப்பாளர்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த முடிவு செய்தது அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. விபத்துக்கு பிறகும் நிகழ்ச்சி தளத்தில் மக்கள் உற்சாகமாக இருப்பதையும், வர்ணனையாளர்கள் உற்சாகமாக பேசுவதையும் பார்த்து எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது.
நிகழ்ச்சியை தொடர வேண்டும் என்று அவர்கள் எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள், அது உண்மைதான். ஆனால் எங்கள் குழுவில் ஒரு விமானி உயிரிழந்தாலும் அவர்கள் இதே போலத்தான் சொல்வார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்திய விங் கமாண்டருக்கு மரியாதை செலுத்தும் விதமாக எனது குழுவினர் இறுதி சாகச நிகழ்ச்சியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்" என்று கூறியிருக்கிறார். இந்த அறிவிப்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications