2 பக்கமும் சிக்கல்! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! நடுவில் மாட்டிய எடப்பாடி! காத்திருக்கும் மெகா ஆபத்து
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கில் எப்போது தீர்ப்பு வரும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ் வாதம், ஓபிஎஸ் ஆதரவாளர் வைரமுத்து வாதம், எடப்பாடி பழனிசாமி வாதம், அதிமுகவின் பொது வாதம், அவைத்தலைவர் தமிழ் மகன் வாதம் என்று வரிசையாக கட்சியின் வாதங்கள் எல்லாம் முடிவிற்கு வந்துள்ளன. இனி வழக்கில் அடுத்து தீர்ப்பு மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் கிளைமேக்ஸ் நெருங்கிவிட்டது. இந்த பொதுக்குழு வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் மேல்முறையீடு வழக்கு ஆகும். அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி கூடியது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார்.

பொதுக்குழு
இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டன. அதோடு இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டார். இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்குதான் விசாரணை முடிந்து தீர்ப்பிற்காக காத்து இருக்கிறது. இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடக்கும் என்று இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவெரா திருமகன் மாரடைப்பால் காலமான சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். உடல்நிலை மோசமான நிலையில் ஈவெரா திருமகன் மரணம் அடைந்ததார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். இதையடுத்தே ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இரட்டை இலை
இந்த தேர்தல் காரணமாக அதிமுகவில் இரட்டை இலை சின்னத்திற்கு சிக்கல் ஏற்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கு நடப்பதால், அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதாவது ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் எதுவும் இன்னும் கட்சியில் அமலுக்கு வரவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டது, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டது, பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது என்று எதையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை.

கடிதம்
சமீபத்தில் கூட புலம் பெயர்ந்தோருக்கு அந்தந்தப் பகுதிகளில் வாக்களிக்க வசதி செய்யும் ரிமோட் வாக்குப்பதிவு முறை குறித்து விளக்கம் கேட்க அதிமுகவிற்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியது. ஜனவரி 16ம் தேதி நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள அதிமுகவிற்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதத்தை எடப்பாடி தரப்பினர் திருப்பி அனுப்பி உள்ளனர். இதற்கு தற்போது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு பதில் அளித்துள்ளார். அதில், தேர்தல் ஆணையத்திடம் இந்த தகவல்தான் உள்ளது. இந்திய தேர்தல் ஆணைய ஆவணத்தில் அப்படித்தான் இருக்கிறது. அதில், அதிமுகவில் இன்றைய தேதி வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்தான் உள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார்.

பதவிகள் உள்ளன
மொத்தத்தில் அதிமுகவில் இன்றைய தேதி வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்தான் உள்ளன. அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வரும் வரை இதில் மாற்றம் இல்லை. சமயத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கில், தீர்ப்பு வந்தாலும், பொதுக்குழு மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளுமா என்பதும் சந்தேகம்தான். தேர்தல் ஆணையம் இந்த பொதுக்குழு முடிவை ஏற்கும் வரை, ஓபிஎஸ்தான் ஒருங்கிணைப்பாளர், எடப்பாடிதான் இணை ஒருங்கிணைப்பாளர். அப்படி இருக்கும் பட்சத்தில் அதிமுக சார்பாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யார் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

என்ன நடக்கும்?
ஏனென்றால் அதிமுக வேட்பாளருக்கான வேட்புமனு தாக்கலின் போது பி பார்மில் இருவரும் கையெழுத்து போட வேண்டி இருக்கும். இதில் கையெழுத்து போடவில்லை என்றால் அதிமுக வேட்பாளர் இங்கே இறங்க முடியாது. நகர்ப்புற உள்ளாட்சி இடைத்தேர்தலில் இப்படித்தான் நடந்தது. அப்படியே எடப்பாடி இறங்கி வந்து கையெழுத்து போட்டாலும், அவர் ஓ பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைப்பாளராக ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் ஆகிவிடும். கிட்டத்தட்ட இந்த பக்கமும் செல்ல முடியாமல், அந்த பக்கமும் செல்ல முடியாமல் எடப்பாடி நடுவில் மாட்டிக்கொண்டு உள்ளார். ஒருவேளை இந்த பிரச்சனை தேர்தல் நேரத்தில் விஸ்வரூபம் எடுத்தால்.. இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்க கூட வாய்ப்புகள் உள்ளன. அதன்பின் அதற்கு தனியாக எடப்பாடி - ஓபிஎஸ் சட்ட போராட்டம் நடத்த வேண்டி இருக்கும்.

ஏற்க வேண்டும்
இதை சமாளிக்க ஒரே வழி அதிமுக இங்கே போட்டியிடாமல் பாஜக, அல்லது தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கூட்டணி கட்சிக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கலாம். கடந்த தேர்தலில் ஈரோடு கிழக்கில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. , அதேபோல் இந்த முறையும் கூட்டணி கட்சிக்கு வாய்ப்பு கொடுக்கலாம். ஆனால் திமுக கூட்டணி வலிமையாக இருக்கும் நிலையில், அதிமுக நேரடியாக இறங்காமல் கூட்டணியை இறக்குவது திமுகவிற்கு வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தியது போல ஆகிவிடும். எனவே எடப்பாடி - ஓபிஎஸ் என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அதற்குள் தீர்ப்பு வந்தும், தேர்தல் ஆணையமும் இதில் ஒரு முடிவை எடுத்தால், சின்னம் முடங்காமல் இருக்க வாய்ப்புகள் உள்ளன. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications