சிதறிய உடல்கள்.. சத்தியமங்கலம் கார் விபத்தில் 4 நண்பர்கள் பலி! திருமணம் நடைபெற இருந்த நிலையில் சோகம்
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் நண்பர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்து அமைந்து உள்ளது சதுமுகை பகுதி. இந்த ஊரை சேர்ந்த இளையராஜா, முருகானந்தம், கீர்த்தி வேல் துரை, பூவரசன், மற்றும் ராகவன் ஆகிய 5 பேரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். இவர்கள் 5 பேரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சத்தியமங்கலத்துக்கு சென்று உள்ளனர். அப்போது சத்தியமங்கலத்தை அடுத்து உள்ள செண்பக புதூர் என்ற இடத்தில், இவர்களது கார் சென்று கொண்டு இருந்தது.

அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுபாட்டை கார் இழந்தது. அதே வேகத்தில் சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது கார் மோதி உருக்குலைந்து போனது. குறிப்பாக காரின் முன்பகுதி மரத்தில் மோதியதில் பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் ராகவன், பூவரசன், கீர்த்திவேல் துரை ஆகிய மூன்று பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த முருகானந்தம் மற்றும் இளையராஜா உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.
அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனை நோக்கி செல்லும் வழியிலேயே முருகானந்தம் என்பவரும் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்து உள்ளது. படுகாயம் அடைந்த இளையராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த 4 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த விபத்தில் உயிரிழந்த கீர்த்திவேல் துரை என்பவர் அப்பகுதியில் கோவில் பூசாரியாக பணி புரிந்து வந்து உள்ளார். அடுத்த வாரம் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்காக காரில் சென்ற நண்பர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications