ஈரோடு அருகே உயிரை விட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்.. 2 பெண்கள் உள்பட 4 பேரை சிக்க வைத்த கடிதம்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மீன்கிணறு பகுதியை சேர்ந்தவர் தனசேகர் தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் தனது மனைவி, மற்றும் மகள் இரண்டு பேருக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்டார். இவர்கள் தங்கள் வீட்டில் கடிதம் எழுதி வைத்திருந்தனர். அதன் அடிப்படையில் தற்கொலைக்கு தூண்டியதாக 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே மீன்கிணறு என்ற பகுதி உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த 36 வயதாகும் தனசேகர் தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவருடைய மனைவி பாலாமணி (29). இவர்களுடைய மகள் வந்தனா (10), மகன் மோனீஷ் (7). கடந்த ஜனவரி 15-ந்தேதி தனசேகரும், பாலாமணியும் தங்கள் குழந்தைகள் வந்தனா, மோனீஷ் ஆகியோருக்கு குளிர்பானத்தில் விஷ மாத்திரையை கலந்து கொடுத்து குடிக்க வைத்தனர். அதன்பின்னர் தனசேகரும், பாலாமணியும் குளிர்பானத்தில் விஷ மாத்திரையை கலந்து குடித்து மயங்கி விழுந்தனர்.

இதை கண்ட அக்கம்பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 4 பேரும் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். இந்த நிலையில் தனசேகர் வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது,வீட்டில் இருந்து ஒரு கடிதத்தை கண்டெடுத்தனர்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாவது: ஈரோடு மாவட்டம் பெருந்துறை புதுதொட்டிபாளையத்தைச் சேர்ந்த சேது என்கிற கோபி சங்கர் (25), சிறுவலூர் பதிபாளையத்தைச் சேர்ந்த நாராயணசாமி (52), அதே பகுதியை சேர்ந்த தனசேகர் என்பவருடைய மனைவி வெண்ணிலா (38), சண்முகம் என்பவருடைய மனைவி சுமதி (40) ஆகியோர் எங்களுக்கு சுய உதவிக்குழுக்கள் மற்றும் மைக்ரோ பைனான்ஸ் மூலம் கடன் பெற்று தந்தார்கள். இதற்காக அதிக தொகையை கமிஷனாக பெற்றுக்கொண்டு எங்களை ஏமாற்றினர்.
இதனால் நாங்கள் இதர சுய உதவிக்குழுக்களில் பணம் பெற இயலாதபடி செய்து விட்டனர். எனவே தாங்கள் அதிக வட்டிக்கு தனியார் நிறுவனத்தில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம். மேலும் நிதி நிறுவனத்தில் வட்டிக்கு மேல் வட்டி போட்டு பணம் வசூலித்ததால் நாங்கள் மிகுந்த கடனுக்கு உள்ளாகினோம். நாங்கள் தற்கொலை செய்து கொள்ள இந்த 4 பேர் தான் காரணம்" இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை தற்கொலைக்கு தூண்டியதாக கோபி சங்கர், நாராயணசாமி, வெண்ணிலா, சுமதி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications