‛‛சாதி மறுப்பு திருமணம்’’.. மகளை பழிவாங்க மருமகனின் 15 வயது தங்கை படுகொலை. ஈரோட்டில் ஷாக்
ஈரோடு: தனது மகள் சாதி மறுப்பு திருமணம் செய்துக்கொண்டதை ஏற்றுக்கொள்ள முடியாத தந்தை, மகளுடைய கணவரின் 15 வயது தங்கையை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் ஈரோட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்போதெல்லாம் யாரு சார் சாதி பார்க்குறாங்க? என்கிற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர். ஆனால், சாதியும், தீண்டாமையும் இன்னமும் நீடித்து வருகிறது என்பதை ஆணவக் கொலைகள் அடிக்கடி மெய்ப்பித்து வருகின்றன. அப்படி ஒரு சம்பவம்தான் ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடந்திருக்கிறது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே ஏரங்காட்டூர் குருவாயூரப்பன் நகரை சேர்ந்த பட்டியலின இளைஞர் சுபாஷ் (24) என்பவரும், சத்தியமங்கலம், காந்தி நகரை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மஞ்சு (22) எனும் இளம்பெண்ணும் கடந்து மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சாதியப் பாகுபாடு காரணமாக பெண் வீட்டார் இவர்களது காதலை ஏற்கவில்லை. இந்நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
எனினும் மஞ்சுவின் தந்தை சந்திரன், தாய் சித்ரா ஆகியோர் சுபாஷுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து மார்ச் 6ம் தேதியான நேற்று கோடூர சம்பவத்தை மஞ்சுவின் பெற்றோர் அரங்கேற்றியுள்ளனர். அதாவது, சுபாஷ் தனது தங்கை ஹரிணியை (15) இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த போது வேன் ஒன்று வேகமாக வந்து இவர்கள் மீது மோதியுள்ளது.
இருவரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளனர். அப்போது வேனை ஓட்டி வந்த மஞ்சுவின் தந்தை சந்திரன், வேனை விட்டு இறங்கி வந்து "இத்தோடு செத்து தொலைடா" என்று திட்டிவிட்டு பின்னால் பைக்கில் வந்த தனது மனைவியுடன் தப்பி சென்றிருக்கிறார். இந்த கொலை முயற்சியில் சுபாஷின் 15 வயது தங்கை உயிரிழந்திருக்கிறார்.
படுகாயங்களுடன் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் சுபாஷ், மேற்குறிப்பிட்ட சம்பவத்தை வாக்குமூலமாக கொடுத்திருக்கிறார். வாக்குமூலத்தின் அடிப்படையில் பவானிசாகர் காவல் நிலையத்தில் எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் உள்பட பல பிரிவுகளில் சந்திரன், சித்ரா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்படியான பாதுகாப்புகள் அனைத்தையும் வழங்கிட வேண்டும். தொடரும் ஆணவப்படுகொலைகளை அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளனர்.
மட்டுமல்லாது, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஈரோடு மாவட்டத் தலைவர் பி.பி.பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications