இப்படியும் ஒரு பஸ் டிரைவரா.. அந்தியூர் பேருந்து ஓட்டுநருக்கு குவியும் பாராட்டுகள்.. காரணம் என்ன தெரியுமா?
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்தியூரைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஹெல்மெட் அணிந்து பேருந்து இயக்கிய சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பொதுவாக தனியார் பேருந்து என்றாலே ஒருவிதமான அச்ச உணர்வே ஏற்படும். குறித்த நேரத்துக்கு செல்வதற்காக வாகனங்களை வேகமாக இயக்குவது, அதிக ஒலி எழுப்பது, இரைச்சல் சப்தத்துடன் பாட்டுகளை ஒலிப்பது என ஒருவித அசாதாரண மன நிலையையே ஏற்படுத்தும். ஆனால், அந்தியூரில் தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர் செய்துள்ள செயல் அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானி வழியாக அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டியில் இருந்து ஈரோடு பேருந்து நிலையம் வரை செல்லும் தனியார் பேருந்து ஓட்டுனர் பொதுமக்களுக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தலைக்கவசம் அணிந்து பேருந்து இயக்கி சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டம், அந்தியூரைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் தனியார் பேருந்து ஓட்டுநராக உள்ளார். இவர் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக ஈரோட்டில் இருந்து பவானி வழியாக அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி வரை ஈரோடு - பவானி - மூன்ரோடு - ஒலகடம் - வெள்ளிதிருப்பூர் - சென்னம்பட்டி வழித்தடத்தில் பேருந்து இயக்கி வருகிறார்.
ஈரோடு மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாமல் வாகனங்களை இயக்கி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், இளைஞர்கள் கிராமப்புற சாலைகளில் அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழக்கும் சூழல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் அதிகப்படியாக கிராமப்புறங்களில் உள்ள சாலையில் பயணிக்கும் தனியார் பேருந்து ஓட்டுநர் சதீஷ் பொதுமக்களுக்கும், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று காலை சென்னம்பட்டியில் இருந்து ஈரோடு வரை பேருந்து ஓட்டி சென்ற போது தலைக்கவசம் அணிந்து பேருந்து ஓட்டி சென்றார்.
இந்த செயல் பேருந்தில் பயணித்த பயணிகள் மட்டுமின்றி பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் மற்றும் சாலையில் பயணித்த தலைக்கவசம் இல்லாத வாகன ஓட்டிகளும் வியப்புடன் பார்த்துச் சென்றனர். தொடர்ந்து, அவர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தும் பொழுது அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் தலைக்கவசம் அணிந்து வாகனங்களை இயக்கி செல்லுங்கள் என அறிவுறுத்தினார்.
அப்போது, தலைக்கவசம் என்பது உயிர் கவசம். தலைக்கவசம் அணிந்து செல்வதால் தங்களுக்கும் தங்களுக்கு எதிரே வரும் வாகனங்களுக்கும் எதிர்பாராத நிலையில் ஏற்படும் விபத்தில் கூட லேசான காயத்துடன் உயிர் தப்ப முடியும். எனவே, அனைவரும் தலைக்கவசம் அணிந்து பயணியுங்கள் என அறிவுறுத்தினார்.
தனியார் பேருந்து ஓட்டுநரின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன் தொடர்ந்து ஓட்டுநருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications