ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வணக்கம் அமைச்சரே.. பொன்முடியிடம் ஓட்டு கேட்ட செல்லூர் ராஜூ!
ஈரோடு பிரச்சாரத்தின் போது செல்லூர் ராஜூ மற்றும் பொன்முடி சந்தித்துக் கொண்டனர்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் அமைச்சர் பொன்முடி இருவரும் சந்தித்த போது வணக்கம் வைத்துக் கொண்டது தொண்டர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், சுயேட்சைகள் உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர்.

அமைச்சர்கள் படை
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் கண்டிப்பாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் திமுகவினர் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், செந்தில் பாலாஜி, எ.வ.வேலு, கே.என்.நேரு, அன்பரசன், ஆவடி நாசர், மா.சுப்பிரமணியன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

அதிமுக தீவிரம்
இதேபோல் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தலைமையில் கே.சி.கருப்பணன், கே.வி.ராமலிங்கம், ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி. வேலுமணி, தங்கமணி உள்பட 30க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் முகாமிட்டு பகுதிகளில் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் ஈரோட்டில் முகாமிட்டுள்ளதால், ஈரோடு கிழக்கு தொகுதியே திருவிழா கோலம் பூண்டுள்ளது.

செல்லூர் ராஜூ பிரச்சாரம்
இந்த நிலையில் இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக தொண்டர்களுடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் வீடு வீடாக சென்று தீவிரமாக வாக்கு சேகரித்தார். அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளையும், திமுக ஆட்சியின் அவலங்களையும் கூறி வாக்கு சேகரித்தார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து செல்லூர் ராஜூ புறப்பட்ட போது, எதிரே அமைச்சர் பொன்முடி வாக்கு சேகரிப்பதற்காக காரில் வந்திருந்தார்.

வணக்கம் அமைச்சரே
எதிரில் அதிமுகவினர் காரை கடந்து சென்றதால், பொன்முடி காரில் இருந்து இறங்காமல் இருந்தார். அப்போது எதிரே நடந்து வந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "வணக்கம் அமைச்சரே.. ஓட்டு கேட்கிறோம் அமைச்சரே.." என்று வணக்கம் கூறி சென்றார். இதற்கு சிரித்துக் கொண்டே அமைச்சர் பொன்முடியும் வணக்கம் வைத்தார். எதிரெதிர் கட்சிகளுக்காக வாக்கு சேகரிக்கும் முக்கிய நிர்வாகிகள் சந்தித்துக் கொண்ட போது, பரஸ்பரம் வணக்கம் வைத்தது தொண்டர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications