விஜய்க்கு ஆதரவு தரும் அண்ணாமலை.. 2026ல் தமிழக அரசியல் அடியோடு மாறப்போகுது! சொன்னதை கவனிச்சீங்களா
ஈரோடு: தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி நடிகர் விஜய் அரசியலுக்குள் வந்துள்ளார். 2026 தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் கட்சி களமிறங்கும் நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. கட்சி தொடங்கியபோதே 2026 தமிழக சட்டசபை தேர்தலில் களமிறங்க போவதாக அறிவித்தார். அரசியல் கட்சி தொடங்கி உள்ளதால் நடிகர் விஜய் விரைவில் சினிமாவுக்கு முழுக்குப்போட உள்ளார்.

அதன்பிறகு முழுநேர அரசியலில் கவனம் செலுத்த உள்ளார். இதில் முதற்கட்டமாக விரைவில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முதல் அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. அதுமட்டுமின்றி கட்சி கொடியும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் தான் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார். ஈரோட்டில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் இன்று நான்கு முனை போட்டி உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜகவின் என்டிஏ, புதியதாக நடிகர் விஜய் வருகிறார். நடிகர் விஜயை நான் ஏற்கனவே அரசியலுக்கு வரவேற்றுள்ளேன். நிறையபேர் அரசியலுக்கு வந்தால் தான் மக்களுக்கு ‛சாய்ஸ்' இருக்கும்.
அதனால் விஜய் அரசியலுக்கு வருவதை நினைத்து பயப்படக்கூடாது. விஜய் அரசியலுக்கு வருகிறாரே? அப்போ 3 முனை என்பது நான்கு முனை ஆகிவிட்டதா? வரட்டும். அவர் ஒரு சித்தாந்தத்தை மக்கள் முன்பு வைக்கட்டும். மக்கள் எல்லோரையும் பார்க்கட்டும். இந்த வேளையில் மக்கள் வேட்பாளர்களை பார்க்க ஆரம்பிப்பார்கள். 2026ல் முதல் முதலாக வேட்பாளர்களை பார்த்து ஓட்டுப்போடுவார்கள். கட்சியை பார்த்தும் ஓட்டுப்போடுவார்கள். அதேபோல் வேட்பாளர்களை பார்த்தும் ஓட்டுப்போடுவார்கள். வேட்பாளர்களுக்கு ஒரு மரியாதை இருக்கும். மேலும் ஓட்டு 4 ஆக பிரியும்போது வேட்பாளர் 40 ஆயிரம் ஓட்டில் ஜெயித்து எம்எல்ஏ ஆகிவிடுவார்.
அதனால் விஜய் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். அவர் வரட்டும். புதியவர்கள் வரட்டும். அண்ணன் சீமான் இருக்கிறார். அவரும் வலிமையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏனென்றால் இது எல்லாம் அடிப்படை கருத்துகள். மக்களிடம் எல்லா ஆப்ஷனையும் வைப்போம். நான்கு முனை போட்டி வரும்போது பாஜகவில் ஒரு நல்லவர் இருக்கிறார். அவருக்கு தொகுதியில் சொந்தமாக 20 ஆயிரம் இருக்கிறது என்றால் அவர் ஜெயித்துவிட்டு வந்துவிடுவார். தமிழக அரசியல் 2026ல் அடியோடு மாறப்போகிறது. இதனை எத்தனை அரசியல் கட்சி தலைவர்கள் புரிந்து வைத்துள்ளார்கள் என்பது எனக்கு தெரியவில்லை'' என்றார்.












Click it and Unblock the Notifications