ஈரோட்டில் கால் டாக்சி ஓட்டுநர்களை சிறைபிடித்த வாடகை கார் ஓட்டுநர்கள்.. வழிபறி நடப்பதாக வாக்குவாதம்
ஈரோடு: ஈரோடு அடுத்த பள்ளிப்பாளையத்தில் குறைந்த வாடகையில் பயணிகளை கால் டாக்சி ஓட்டுநர்கள் அழைத்து செல்வதால், தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, கால் டாக்ஸி ஓட்டுநர்களை வாடகை கார் ஓட்டுநர்கள் தடுத்து நிறுத்தி சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் வாகன ஓட்டிகளின் முக்கிய பிரச்சனை என்பது கால் டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் வாடகை கார் ஒட்டுநர்கள் இடையே உள்ள மோதலாக உள்ளது. அதேநேரம் பொதுமக்களோ கட்டணம் குறைவு என்பதால், வாடகை கார் ஓட்டுநர்களைவிட, வாடகை ஆட்டோ ஓட்டுநர்களைவிட , கால் டாக்ஸிகளையும், ஓலா உபேர், ரெட் டாக்ஸி போன்ற ஆட்டோக்களையும் அதிகம் விரும்புகிறார்கள். இதனால் வாடகை கார் ஓட்டுநர்கள், வாடகை ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி, ஓசூர் என தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களிலும் டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் வாடகை கார் ஓட்டுநர்களிடையே பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. பல சிறிய நகரங்களிலும் மெல்ல மெல்ல டாக்ஸிகள் சேவைகளும், ஓலா உபேர் போன்ற தனியார் நிறுவனங்களில் ஆட்டோ, கால் டாக்ஸி சேவைகளும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.
சென்னையை பொறுத்தவரை கால் டாக்ஸியை விடவும் பைக் டாக்ஸியும் வேகமாக வளர்ந்து வருகிறது. பைக் டாக்ஸி சேவை காரணமாக தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ மற்றும் கார் வாடகை ஓட்டுநர்கள் புலம்பி வருகிறார்கள். ஒட்டுமொத்தமாக கால் டாக்ஸி தனியார் நிறுவனங்களின் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வாடகை வாகன ஓட்டுநர்கள் இடையே பெரிய அளவில் ஆங்காங்கே மோதல் வெடித்து வருகிறது.
அதன் ஒரு பகுதி தான் ஈரோட்டை அடுத்த பள்ளிப்பாளையத்தில் நடந்துள்ள சம்பவம். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் என்பது ஈரோடு மாவட்டத்தின் புறநகர் பகுதியாகும். இங்கு பல்லாயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இங்கும் ஈரோட்டை போல் கால் டாக்ஸிகள் அதிக அளவில் வளர தொடங்கி உள்ளது. குறைந்த வாடகையில் பயணிகளை கால் டாக்சி ஓட்டுநர்கள் அழைத்து செல்வதால், தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, கால் டாக்ஸி ஓட்டுநர்களை வாடகை கார் ஓட்டுநர்கள் தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர்.
இதனால் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் உள்ளூர் வாடகை வாகன ஓட்டுநர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையானது. வாடகை வாகன ஓட்டுநர்கள் வாடகை என்ற பெயரில் வழிபறி செய்வதாகவும், அதனால் தான் தங்களை பொதுமக்கள் அழைப்பதாகவும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் ஆவேசமாக பேசினார்கள். பதிலுக்கு வாடகை வாகன ஓட்டுநர்களும் பதிலடி கொடுத்தனர். ஒரு கட்டத்தில் பிரச்சனை பெரிய அளவில் வெடித்ததால், போலீசார் விரைந்தார்கள். அவர்கள் சமாதானம் செய்து கார் ஓட்டுநர்களை அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications