ஆளுக்கு நாலு.. டார்கெட் 60.. ஈரோட்டில் திமுக இறக்கிய "மாஸ்டர் பிளான்".. ஸ்டார்ட் எடுக்காத அதிமுக!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பாக கட்சி நிர்வாகிகளுக்கு முக்கியமான டார்கெட் ஒன்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாம்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இமாலய வெற்றிபெற வேண்டும் என்று திமுக - காங்கிரஸ் கூட்டணி தீவிரமாக முயன்று வருகிறது. இந்த தேர்தலுக்காக திமுக முக்கியமான சில வியூகங்களை வகுத்து வருகிறதாம்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இன்னும் அதிமுக என்ன செய்யும் என்பது தெரியவில்லை. அதிமுக சார்பாக இரண்டு அணிகள் போட்டியிடுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி தான் சார்பாக வேட்பாளர் களமிறக்கப்படுவார் என்று அறிவித்து உள்ளது. இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் தரப்பும் நாங்களும் வேட்பாளரை களமிறக்குவோம் என்று கூறி உள்ளது.

எடப்பாடி
இதில் எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பாக போட்டியிட விரும்புபவர்களின் விருப்ப மனுக்களையும் வாங்க தொடங்கிவிட்டார். அதிமுக சார்பாக நிற்க விரும்பும் நபர்களின் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டு வருகின்றன. இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் தரப்போ, அதிமுகவில் நான்தான் ஒருங்கிணைப்பாளர். நான் கையெழுத்து போட்டால்தான் வேட்பாளர் போட்டியிடவே முடியும். ஆனால் நான்தான் வேட்பாளரை நிறுத்துவேன் என்று கூறி வருகிறார். இதனால் அதிமுக கூட்டணியில் பெரிய குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

திமுக
அதிமுக இப்படி முடிவு எடுக்காத நிலையில் இன்னொரு பக்கம் திமுக தரப்பு காங்கிரஸ் வேட்பாளருக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்காக திமுக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. கொங்கு மண்டலத்தில் மாநகராட்சி தேர்தலில் பாஜக, அதிமுகவை திமுக க்ளீன் சுவீப் செய்தது. கோவை பொதுவாக அதிமுக, பாஜக தொகுதியாக இருந்தது. அதை செந்தில் பாலாஜி மாற்றிக்காட்டினார். செந்தில் பாலாஜியின் வியூகம் காரணமாக கொங்கு மண்டலம் முழுக்க திமுக கூட்டணி சிறப்பான வெற்றியை பெற்றது. ஆனால் கோவை அளவிற்கு ஈரோடு அதிமுக, பாஜக தொகுதி கிடையாது. ஈரோட்டில் கவுண்டர்கள் அதிகம் கிடையாது.

திமுக ஆர்வம்
இந்த நிலையில்தான் திமுக இங்கே ஆர்வம் காட்டி வருகிறது. ஈரோடு கிழக்கில் ஏற்கனவே திமுக வென்றதால் இங்கே எப்படியும் மீண்டும் வென்றுவிட வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. ஈரோடு கிழக்கில் 17 சதவிகிதம்தான் அங்கே கவுண்டர்கள் இருக்கிறார்கள். 36 சதவிகிதம் செங்குந்த முதலியார்கள் இருக்கிறார்கள். 17 சதவிகிதம் மைனாரிட்டிகள் இருக்கிறார்கள். 6 சதவிகிதம் அருந்ததியர்கள் இருக்கிறார்கள். இதில் கவுண்டர்கள் வாக்குகளை விட மற்றவர்களை சேர்த்தால் அதிக வாக்குகள் வருகிறது. முக்கியமாக செங்குந்த முதலியார்கள்தான் இங்கு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார்கள்,

ஈரோடு கிழக்கு சட்டசபை
இந்த இடைத்தேர்தலில் பெரும்பாலும் மைனாரிட்டிகள் திமுகவிற்குத்தான் வாக்களிப்பார்கள். அதோடு அதிமுக பாஜகவோடு நெருக்கமாக இருப்பதால் மைனாரிட்டிகள் வாக்குகள் திமுக கூட்டணிக்கே வரும். அதேபோல் தாழ்த்தப்பட்ட மக்கள் விசிக கூட்டணி காரணமாக திமுகவிற்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அவர்கள் வாக்கும் திமுகவிற்குத்தான் செல்லும். முதலியார்கள் திமுக அரசின் மீது அதிருப்தியில் இல்லை. இவர்களை அதிருப்தி அடைய செய்யும் அளவிற்கு திமுக தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறைந்தது முதலியார்கள் 36 சதவிகிதத்தில் 25 சதவிகிதம் பேர் திமுக கூட்டணி வாக்களித்தால் கூட 20+ 17 + 6 என்று 48 சதவிகிதம் எளிதாக வந்துவிடும் என்று திமுக கணக்கு போட்டு வருகிறதாம்.

கணக்கு என்ன
அதோடு செந்தில் பாலாஜி உள்ளிட்ட 11 அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை தேர்தல் பணிக்காக இங்கே திமுக களமிறக்கி உள்ளது. இதில் ஒவ்வொருவருக்கும் 3-4 வார்டு ஒதுக்கப்பட்டு உள்ளது. இங்கே சுமார் 35 வார்டுகள் உள்ளன. இதில் செந்தில் பாலாஜிக்கு வெள்ளாள கவுண்டர்கள் இருக்கும் வார்டுகள் கொடுக்கப்பட்டு உள்ளன. இவர்கள் தற்போது தேர்தல் நேரத்தில் செய்யும் பணிகள், ஆளும் கட்சி இறக்கும் பவர், செந்தில் பாலாஜி, முத்துச்சாமி போன்றவர்கள் இறங்கி வேலை செய்யும் போது வாக்கு 60 சதவிகிதம் வரை எடுக்க வாய்ப்பு உள்ளது என்று திமுக திட்டமிட்டுள்ளது. ஆளுக்கு 4 வார்டுகளில் வேலை செய்யுங்கள், வாக்கு சதவிகிதம் 60க்கும் மேல் வர வேண்டும் என்று திமுக மேலிடம் தேர்தல் பணியாளர்களுக்கு டார்கெட் விதித்து இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications