சாணியை மாற்றி மாற்றி எறிந்த பக்தர்கள்.. ஈரோட்டில் வினோதம்.. சாணியடி திருவிழாவின் பின்னணி
ஈரோடு: தமிழக - கர்நாடகா எல்லையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் வினோத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் பக்தர்கள் சட்டை அணியாமல் பங்கேற்று குவித்து வைக்கப்பட்ட சாணியை அள்ளி உருண்டையாக்கி இன்னொருவர் மீது எறிந்த நிலையில் அந்த திருவிழாவின் பின்னணி பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
நம் நாட்டின் ஒவ்வொரு இடங்களிலும் வெவ்வேறு விதமான திருவிழாக்கள் நடந்து வருகிறது. மேலும் திருவிழாவின்போது கோவிலில் நடக்கும் வழிபாடு முறை மற்றும் பக்தர்களின் நேர்த்திக்கடன் என்பது மாறுபடும். தமிழகத்திலும் ஒரு இடத்தில் இருப்பது போல் இன்னொரு இடத்தில் உள்ள கோவிலில் பூஜைகள், திருவிழாக்கள் நடப்பது இல்லை.

மேலும் சில இடங்களில் வினோதமான திருவிழாக்கள் நடப்பது உண்டு. அந்த வகையில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விழாக்கள் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் நடக்கும். அதேபோல் தான் ஈரோடு மாவட்டத்தில் வினோத சாணியடி திருவிழா இன்று நடந்தது.
அதாவது தமிழகம் - கர்நாடகா எல்லையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பீரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்த 3வது நாளில் இந்த கோவிலில் சாணியடி திருவிழா என்பது வெகுவிமரிசையாக நடக்கும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.
மேலும் கிராமத்தில் உள்ள அனைத்து பசு மாட்டு சாணங்களும் சேகரிக்கப்பட்டு கோவிலின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டது. அதன்பின் பீரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகத்துடன், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆண்கள் சட்டை அணியாமல் பூஜையில் பங்கேற்றனர். அதன்பிறகு சாணத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி சாணியடி திருவிழா தொடங்கியது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சட்டை அணியாமல் சாணி மீது ஏறி உருண்டை உருண்டையாக பிடித்து மற்றவர்களின் மீது வீசினர். இதில் ஈரோடு மட்டுமின்றி கர்நாடகாவை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். இந்த திருவிழாவை வெளிநாட்டினர் மற்றும் அந்த பகுதி மக்கள் ரசித்தனர். கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.
கும்டாபுரம் கிராமத்தில் உள்ள பீரேஸ்வரர் கோவிலில் 300 ஆண்டு பழமை வாய்ந்தது. இந்த கோவில் நீண்ட காலமாக சாணியடி திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவின்போது சாணத்தை உடலில் பூசுவதன் மூலம் நோய்களும் தீரும் என்பதும், இந்த சாணத்தை விவசாய நிலத்தில் பயன்படுத்தும்போது பயிர்கள் செழித்து வளரும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. இதையடுத்து இன்றைய சாணியடி திருவிழாவுக்கு பிறகு அதனை விவசாயிகள் தங்கள் நிலத்துக்கு எடுத்து சென்று பயன்படுத்தினர்.












Click it and Unblock the Notifications