திமுக மேயர்களுக்கு குடைச்சல் தரும் திமுக கவுன்சிலர்கள்! மாநகராட்சி மல்லுக்கட்டு! ரசிக்கும் அதிமுக!
ஈரோடு: தமிழகம் முழுவதும் திமுக மேயர்களுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் சிலரே குடைச்சல் கொடுக்கும் நிகழ்வை அதிமுக ரசித்து வருகிறது.
வேலூர், ஒசூர், ஈரோடு, மதுரை உள்ளிட்ட பல மாநகராட்சிகளில், சொந்தக் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களே மேயர்களுக்கு எதிராக வரிந்துக் கட்டி நிற்கின்றனர்.
இதனால் இந்த விவகாரத்தை புதிய தலைவலியாக பார்க்கிறது திமுக தலைமை.
பெரம்பலூரில் கே.என்.நேரு பேசுவார்! முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்ச்சி ரத்து! திமுக திடீர் அறிவிப்பு!
மாநகராட்சி மல்லுக்கட்டு
தமிழகம் முழுவதும் மாநகராட்சி ஒப்பந்தப் பணிகள் விவகாரத்தில் மேயர்கள்- கவுன்சிலர்கள் இடையே லடாய் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக திமுக கவுன்சிலர்களே திமுக மேயர்களுக்கு எதிராக மாமன்றக் கூட்டங்களில் குற்றச்சாட்டுகளை முன் வைத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். ஓரிரு மாதங்களுக்கு முன்பு வேலூர் மாநகராட்சியில் மேயர் சுஜாதாவுக்கு எதிராக திமுக பெண் கவுன்சிலர் புஷ்பலதா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
ஒசூர் -மதுரை
அவரைத் தொடர்ந்து ஒசூர் மாநகராட்சியில் திமுக மேயர் சத்யா கொண்டு வந்த தீர்மானங்களை கடுமையாக எதிர்த்து திமுக கவுன்சிலரும், நடிகருமான மாதேஷ்வரன், தீர்மானமே புரியவில்லை எனப் பேசி மாமன்றக் கூட்டத்தை அதிர வைத்தார். இதேபோல் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணிக்கு எதிராகவும் திமுக கவுன்சிலர்கள் உள்ளடி வேலைகள் பார்த்து வருகின்றனர். இதனிடையே எல்லாவற்றுக்கும் மேலாக மழைநீரை அகற்றாவிட்டல் நானே உண்ணாவிரதம் இருப்பேன் என மேயரிடம் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் அமைச்சர் மூர்த்தி.
ஈரோடு மாநகராட்சி
இந்நிலையில் இப்போது புதிதாக ஈரோடு மாநகராட்சியில் மல்லுக்கட்டு அரங்கேறியுள்ளது. மாமன்ற அவசரக் கூட்டத்தில் பேசிய 8வது வார்டு திமுக கவுன்சிலர் ஆதி ஸ்ரீதர், தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட வில்லை என திமுக மேயருக்கு எதிராக பேசினார். இதனால் மாமன்றக் கூட்டத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. மேயர் இருக்கையில் இருந்து டென்ஷனோடு எழுந்த மேயர் நாகரத்தினம், நேராக திமுக கவுன்சிலர் ஆதி ஸ்ரீதர் இருக்கை அருகே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ரசிக்கும் அதிமுக
இப்படி தமிழகம் முழுவதும் திமுக மேயர்களுக்கு எதிராக சொந்தக் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களே குடைச்சல் கொடுக்கும் நிகழ்வு அதிகரித்துள்ளது. இதனை அதிமுக ரசித்து வேடிக்கை பார்ப்பதுடன் நாம் செய்ய வேண்டிய வேலையை திமுகவினரே செய்வதால் வேலை மிச்சம் என எண்ணுகிறது. இதனால் மாநகராட்சி மல்லுக்கட்டு விவகாரத்தை புதிய தலைவலியாக பார்க்கிறது திமுக தலைமை.