தொடர் குடைச்சல்.. கரப்பான் பூச்சி கட்சிக்கு எதிராக சிபிஐ விசாரணை! உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு!
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் சர்ச்சை கருத்தை தொடர்ந்து உருவாகியிருக்கும் கரப்பான் பூச்சி கட்சி, ஆளும் அரசுகளுக்கு எதிரான குடைச்சலை தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், இக்கட்சிக்கு எதிராக சிபிஐ விசாரணை வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த மே 15-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில், மூத்த வழக்கறிஞர்கள் அந்தஸ்து வழங்குவது மற்றும் போலி வழக்கறிஞர்களின் சான்றிதழ்கள் குறித்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு தெரிவித்த கருத்துதான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்.

“வேலையில்லாமல் இருக்கும் கரப்பான் பூச்சிகளைப் போன்ற சில இளைஞர்கள் இந்தத் துறைக்குள் (சட்டத் துறை) நுழைகிறார்கள். அவர்கள் ஊடகம், சமூக ஊடகம் அல்லது ஆர்டிஐ (RTI) ஆர்வலர்களாக மாறி அனைவரையும் தாக்கத் தொடங்குகின்றனர்.” என்று நீதிபதி கூறியிருந்தார்.
இது சமூக வலைத்தளங்களில் “வேலையில்லாத இந்திய இளைஞர்களை நீதிமன்றம் கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிடுகிறது” என புரிந்துகொள்ளப்பட்டு, இளைஞர்களிடையே கடும் எதிர்வினையை இந்த கருத்து தூண்டியிருந்தது.
இந்தக் கருத்துக்கு நையாண்டி ரீதியாகப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவின் பாஸ்டன் நகரைச் சேர்ந்த சமூக ஊடகவியலாளர் அபிஜீத் திப்கே என்பவரால் மே 16 அன்று "காக்ரோச் ஜனதா கட்சி" என்ற ஆன்லைன் இயக்கம் தொடங்கப்பட்டது.
இந்த இயக்கம் தொடங்கப்பட்ட மிகக் குறுகிய காலத்திலேயே, இன்ஸ்டாகிராமில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளை விட அதிகப் பின்தொடர்பாளர்களைப் பெற்றது.
தங்களுக்கு என்று ஒரு தேர்தல் சின்னம், 5 அம்சக் கொள்கை அறிக்கை போன்றவற்றையும் அவர்கள் உருவாக்கினர். இந்த இயக்கத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட சில அரசியல் தலைவர்களும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். மேலும், 'காக்ரோச் ஜனதா கட்சி' என்ற பெயரில் வர்த்தக முத்திரை பதியவும் விண்ணப்பங்கள் செய்யப்பட்டன.
இப்படி இருக்கையில், போலி வழக்கறிஞர்கள், போலி சட்டப் படிப்புகள் மற்றும் இந்த "காக்ரோச் ஜனதா கட்சி" என்ற இயக்கத்தின் பின்னணியில் உள்ள நபர்களின் செயல்பாடுகள் குறித்து மத்திய புலனாய்வுத் துறை (CBI) விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் ராஜேஷ் சிங் சவுகான் மூலம் உச்சநீதிமன்றத்தில் பொதுமநல மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் வாய்மொழியாகக் கூறும் கருத்துக்களைச் சூழலில் இருந்து பிரித்து, சிறிய துண்டுகளாக வெட்டி, சமூக வலைத்தளங்களில் மீம்களாகவும் ரீல்களாகவும் மாற்றி, அதன் மூலம் சிலர் வணிக ரீதியாகப் லாபம் சம்பாதிக்கிறார்கள். நீதிமன்ற மாண்பைச் சிதைக்கும் இத்தகைய வணிகமயமாக்கலைத் தடுக்க வேண்டும் என்று இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications