இலவசம் அரசு பஸ்களில்.. இப்போ எங்கே தெரியுமா? நம்ம தமிழகத்தின் விடியல் பயணம்தான் இதில் பெஸ்ட்
சென்னை: தமிழக அரசின் 'விடியல் பயணம்' திட்டம், எவ்வித அடையாள அட்டையும் இன்றி பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத்தை வழங்கி சமூக நீதியை நிலைநாட்டுகிறது. மேற்கு வங்க அரசு ஜூன் 1 முதல் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணத்தை அறிமுகப்படுத்துகிறது. இதற்காகக் க்யூ.ஆர். கோடு அடங்கிய பிரத்யேக 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட உள்ளது. இதுகுறித்த விவரங்களை இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
மேற்கு வங்க மாநிலம் பெண்களின் முன்னேற்றத்தை முன்னிறுத்தி ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜூன் 1 முதல் மாநிலம் முழுவதும் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம் என அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஹேப்பி நியூஸ்
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலைத் தொடர்ந்து பதவியேற்ற புதிய பா.ஜ. அரசு, தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. ஏற்கனவே அனைத்துப் பெண்களுக்கும் மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது போக்குவரத்திலும் பெண்களின் சுமைகளைக் குறைக்கும் இந்தச் செயல்பாடு அம்மாநிலப் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாக, குறுகிய மற்றும் நீண்ட தூரப் பயணங்கள் என அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம். இத்திட்டத்தைப் பயனுள்ள வகையில் செயல்படுத்த, போட்டோவிடன் கூடிய க்யூ.ஆர். கோடு அடங்கிய பிரத்யேக 'ஸ்மார்ட் கார்டு' முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்குத் தேவையான விண்ணப்பங்கள் போக்குவரத்து கழக அலுவலகங்களில் கிடைக்கும்.
இலவச பஸ் பயணம்
விண்ணப்பத்துடன் ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை அல்லது டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைச் சான்றாக இணைக்க வேண்டும். ஸ்மார்ட் கார்டுகள் கிடைக்கும் வரை, பயணத்தின் போது தகுந்த அடையாள அட்டையைக் காண்பித்து, நடத்துனரிடம் 'பூஜ்ய மதிப்புள்ள டிக்கெட்டை' பெற்று பெண்கள் தாராளமாகப் பயணிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கம் மட்டுமல்ல, பெண்களின் முன்னேற்றத்தையும், பொருளாதார சுதந்திரத்தையும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்திய மாநிலங்கள் செயல்படுத்தி வரும் இதுபோன்ற இலவச பேருந்து பயணத் திட்டங்கள், சமூக மாற்றத்திற்கான ஒரு மிகச்சிறந்த கருவியாக உருவெடுத்துள்ளன.
விடியல் பயணம்
இதில் முன்னோடியாகவும், மிக எளிமையான நடைமுறைகளைக் கொண்ட மாநிலமாகவும் நம்முடைய தமிழகம் திகழ்கிறது என்பதை நாம் சொல்லியாக வேண்டும்..
தமிழகத்தின் 'விடியல் பயணம்', பஞ்சாபின் இலவசப் பயணத் திட்டம், கர்நாடகாவின் 'சக்தி திட்டம்', தெலுங்கானாவின் 'மகாலட்சுமி திட்டம்', ஜம்மு & காஷ்மீரின் பிரத்யேக நகரப் பேருந்து சேவை மற்றும் ஆந்திராவின் 'ஸ்திரீ சக்தி' போன்ற முன்னெடுப்புகள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அத்தியாவசியப் பணிகளுக்காக அச்சமின்றிப் பயணிக்க வழிவகுத்துள்ளன.
அடையாள அட்டைகள்
மாநிலத்திற்கு மாநிலம் பயணச் சலுகைகள் மற்றும் நடைமுறைகள் மாறுபட்டாலும், அனைத்து மாநிலங்களிலும் இந்தத் திட்டங்கள் பெண்களின் பொருளாதாரச் சுமையை குறைத்து, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்தத் திட்டங்களின் நடைமுறைச் செயல்பாடுகளைப் பொறுத்தவரை, சில மாநிலங்கள் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் எளிமையான பயணத்தை அனுமதிக்கும் வேளையில், பல மாநிலங்கள் பயனாளிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்த அரசு அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களைக் கட்டாயமாக்கியுள்ளன.
தமிழ்நாடு ஸ்பெஷல்
ஆனால், தமிழகத்தில் எந்தவிதமான அடையாள அட்டையும் இல்லாமல் கண்டக்டரிடம் தகவலை மட்டும் தெரிவித்துவிட்டு, பயணிக்கும் வசதி உள்ளது.. ஆனால், மேற்கு வங்கம், பஞ்சாப், தெலுங்கானா, ஜம்மு & காஷ்மீர் மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் உரிய அடையாளங்களைச் சரிபார்ப்பது அவசியமாகிறது.
அதுமட்டுமல்ல, கர்நாடகாவில் பிரத்யேக 'சக்தி ஸ்மார்ட் கார்டு' முறை மூலம் தவறான பயன்பாடு தடுக்கப்படுகிறது. பெண்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில், ஆந்திரா போன்ற மாநிலங்கள் கூடுதல் சலுகைகளை வழங்குகின்றன. இத்தகைய திட்டங்கள், இந்தியாவின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பில் பெண்களின் பங்களிப்பை உறுதிப்படுத்துவது உண்மையிலேயே வரவேற்புக்குரிய ஒன்றாகும்...!!












Click it and Unblock the Notifications