"கல் வீசும் அமைச்சர்" 22 மாத திமுக ஆட்சியில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.. எடப்பாடி பழனிசாமி!
திமுகவினர் தேர்தலுக்காக மட்டுமே வாக்குறுதி கொடுப்பவர்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ஈரோடு: 22 மாத கால ஆட்சியில் திமுக எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். ஈரோட்டில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று விமர்சித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிப்.27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல் அதிமுக சார்பாக தென்னரசு, தேமுதிக சார்பாக ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா உள்ளிட்டோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பிரச்சாரம்
வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பாக திமுகவினர் பிரச்சாரத்தை தொடங்கியது. ஆனால் அதிமுக தரப்பில் இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் சிரமம் இருந்தது. இறுதியாக இரட்டை இலை சின்னத்தில் தென்னரசு போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அதிமுக வேட்பாளர் தென்னரசுவின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தக் கட்ட நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இபிஎஸ் ஆலோசனை
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவின் பிரச்சார வியூகம், பிரச்சாரத்திற்கு முன் செய்ய வேண்டிய பணிகள், பிரச்சாரத்தில் பேசப்பட வேண்டியது உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ சரஸ்வதி மற்றும் முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி பேச்சு
இதனைத் தொடர்ந்து அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 22 மாத கால ஆட்சியில் திமுக எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை. ஒவ்வொரு நாளும் 2 முதல் 4 கொலைகள் நடக்கின்றன. திமுகவினர் தேர்தலுக்காக மட்டுமே வாக்குறுதி கொடுப்பவர்கள். கல் எடுத்து வீசும் அமைச்சர்களால் தமிழ்நாடு எப்படி வளர்ச்சி பாதைக்கு செல்லும் என்று குற்றம்சாட்டினார்.

இபிஎஸ் 5 நாட்கள் பிரச்சாரம்?
அதேபோல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி 5 நாட்கள் பிரச்சாரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் வாக்குப்பதிவு நடப்பதற்கு முன் இரண்டு நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ளவும் ஆலோசித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தேர்தல் பணிக்குழுவில் 111 பேர் நியமிக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதிமுக பிரச்சாரத்தை மேலும் தீவிரப்படுத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications