காசு கொடுத்தால் ஜெயித்து விட முடியுமா?.. அப்படி பார்த்தால் காங்கிரஸிடம் இல்லாத காசா?- துரைமுருகன்
ஈரோடு: காசு கொடுத்தால் தேர்தலில் ஜெயித்து விட முடியும் என அதிமுகவினர் கருதுவதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டை அடுத்த லக்காபுரத்தில் நடைபெற்ற திமுக கிராம சபை கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் மக்கள் பிரச்சனையை தீர்க்க முயற்சிப்பதே இல்லை. எதிர்க்கட்சிகளும் இதே தவறை செய்ய கூடாது என்பதற்காகத்தான் மக்களை திமுக நேரில் சந்தித்து வருகிறது.
மகத்தான சக்தி
தற்போது மக்கள் தெரிவித்துள்ள குறைகள் குறித்து அதிகாரிகளிடம் பேசி நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மக்களை சந்திப்பது தான் மகத்தான சக்தி.
பக்திமான்கள்
சிலை திருட்டு மிகவும் ஆபத்தானது. பக்திமான்களுக்கு வருத்தம் ஏற்படுத்தக்கூடியது. கலைநயம் படைத்த சிலைகள் திருடப்படுவது அவமான செயல். நீதிமன்றம் தெரிவித்த பிறகும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஐஜியாக இருந்த பொன்மாணிக்கவேலின் நேர்மையை அரசு சோதிப்பது வேடிக்கையானது.
பாகுபாடு
ஜெயலலிதா உயிரிழப்பு குறித்து சி.பி.ஐ விசாரித்திருந்தால் இத்தனை சர்ச்சைகள் ஏற்பட்டிருக்காது. ஐஏஎஸ் அதிகாரிகள் இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது. ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே எவ்வித பாகுபாடும் ஏற்படக்கூடாது.
சந்திக்கிறோம்
திமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும். கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு மக்களை சந்திக்க நேரமில்லை. ஆனால் எதிர்க்கட்சிகாரர்களாகிய நாங்கள் தற்போது உங்களை வந்து சந்திக்கிறோம்.
அதிமுககாரர்கள்
உங்களுடைய குறைகளை கேட்டு வருகிறோம். பொங்கல் பரிசு என்கிற பெயரில் ரூ. 1000 கொடுத்துவிட்டால் மக்கள் அதிமுகவுக்கு வாக்களித்து விடுவர் என தப்பு கணக்கு போடுகிறார்கள். அப்படி பார்த்தால் காங்கிரஸ் கட்சியினரிடம் இல்லாத காசா அதிமுககாரர்களிடம் இருக்க போகுது?
எந்த கட்சிக்கு
அப்படியிருக்கையில் முந்தைய லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் ஏன் தோற்று போனார்கள். அதிமுக கொடுக்கும் காசை வாங்கிக் கோங்க. ஆனால் ஓட்டை மாத்திரம் எந்த கட்சி நன்மை செய்கிறது என நினைக்கிறீர்களோ அந்த கட்சிக்கு போட்டு விடுங்கள் என்றார் துரைமுருகன்.