எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை.. ஈரோட்டில் குவியும் அதிமுக நிர்வாகிகள்..மாலை வேட்பாளர் அறிவிப்பு?
அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி 2ம் நாளாக தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி, கேவி ராமலிங்கம் உள்ளிட்டோருடன் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து 2ம் நாளாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வேட்பாளரை இறுதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மாலை அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலால் தமிழ்நாடு அரசியல் களத்தில் அனலை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் அமைதியாக மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வாய்ப்பு வழங்கப்பட்டு, வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் தேர்தல் பணிகளிலும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.
ஆனால் மறுபக்கம் எதிர்க்கட்சியான அதிமுகவில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலால், உட்கட்சி பூசல் அடுத்தக்கட்டத்திற்கு சென்றுள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பிலும் வேட்பாளர் நிறுத்தப்படுவார்கள் என்று இரு தரப்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.

7 மணி நேர ஆலோசனை
இதனிடையே நேற்று ஈரோடு மாவட்டம் சென்ற எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கேவி ராமலிங்கம், தங்கமணி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் யுவராஜா, விடியல் சேகர் உள்ளிட்டோருடன் 7 மணி நேரத்திற்கு மேலாகவும் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், அதிமுக வேட்பாளராக 6 பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு, ஒருவர் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக பற்றி ஆலோசனை
அதுமட்டுமல்லாமல், இரட்டை இலை சின்னத்தை பெறுவது குறித்தும், சின்னம் முடக்கப்பட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பாஜக ஆதரவுடன் போட்டியிடுவதால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்ன என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது.

2ம் நாளாக ஆலோசனை
நேற்று நடைபெற்ற ஆலோசனைக்கு பின்னர், இன்று அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்து வேகமாக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி, இன்று மீண்டும் இரண்டாவது நாளாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

வேட்பாளர் யார்?
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின், தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை அதிமுக வேட்பாளர் யார் என்று அறிவிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமியின் பரிசீலனை பட்டியலில் முன்னாள் அமைச்சர் கேவி ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ தென்னரசு மற்றும் பெண் ஒருவரின் பெயர்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications