சூப்பர்! வெறும் ஒரு ரூபாய்க்கு மதிய சாப்பாடு.. ஈரோட்டில் அசத்தும் தம்பதி! உணவகத்தில் குவியும் மக்கள்
ஈரோடு: 'ஒரு ரூபாய்க்கு ஒருவேளை சாப்பாடு'. இதைப் படித்ததும் ஏதோ ஆடி மாதம் ஆஃபர் போல தோன்றுகிறதா? கடந்த 15 வருடங்களாக இந்தச் சேவையை செய்து வருகிறார் ஈரோட்டைச் சேர்ந்த வெங்கட்ராமன். இதை அறிந்த ஸ்டாலின் அவரை ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி இருக்கிறார்.
இன்றைக்கு உள்ள விலைவாசி உயர்வில் ஒரு ரூபாய்க்கு மதிய சாப்பாடு என்பது எப்படி சாத்தியம்? வெங்கட்ராமனிடம் பேசினோம். "அது எல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லைங்க. மனசு இருந்தா செய்யலாம். நாங்க ஒண்ணும் தனியா இவங்களுக்காக சமைக்கவில்லை. ஹோட்டல் வேலைக்கு ஆள்கள் இருக்காங்க. அவங்களுக்கு சமைக்கும்போதே சேர்த்துச் சமைக்கிறோம். பொருளாதார ரீதியா கொஞ்சம் கஷ்டம்தான். நீங்க கேட்பது புரிகிறது. ஆனாலும் சமாளிக்கிறோம்" என்கிறார் உரிமையாளர் வெங்கட்ராமன்.

ஈரோடு அரசு மருத்துவமனை அருகே இந்த உணவகம் நடந்து வருகிறது. இங்கே வரும் வாடிக்கையாளர்கள் பலர் நோயாளிகளின் உறவினர்கள். அதுவும் கிராமப்புற பகுதிகளிலிருந்து வருபவர்கள். ஏழை எளிய மக்கள். இவர்களின் நிலையை உணர்ந்து இந்த உன்னதமான சேவையைச் செய்து வருகிறார் இவர்.
"பணம் ஒரு விஷயம்தாங்க. ஆனால் அதைவிட மக்கள் முக்கியம். 'மக்களுக்கு உதவுவது பெருமை இல்லை. அது மனுஷனோட கடமை'. அப்படித்தாங்க இதை 15 வருஷமா நடத்தி வருகிறோம். எனக்கு இரண்டு பொண்ணுங்க. அவங்களுக்கு கல்யாணமாகிடுச்சு. நானும் மனைவியும் மட்டும்தான்.

இப்பகூட எனக்கு ஹார்ட் ஆபரேஷன் நடந்தது. பழைய மாதிரி வேலை செய்ய முடியல. இந்த ஹோட்டல் தொழில் செய்வது சாதாரணமான விஷயம் இல்லைங்க. காலையில் 5 மணிக்கே வேலையை தொடங்கணும். காலை டிஃபன் சாப்பிட 11 ஆகிடும். மதியம் 4 மணி ஆகிடும். இரவு 10 ஆகிடும். கடுமையா உழைக்கணுங்க. அப்பத்தான் தாக்குப் பிடிக்க முடியும்.
மக்களுக்காக நாம செலவு செய்கிறோம். அது வேற விதத்தில் நமக்கு கிடைக்குங்க. என் சேவையைப் பாராட்டி ஒரு பைசா வாங்காமல் என் பொண்ணுக்கு கல்லூரியில் படிக்க சீட்டு கொடுத்தாங்க. அதுல எனக்கு சில லட்சங்கள் மிச்சங்க.

அதேபோல இப்ப இதய அறுவைச் சிகிச்சை செஞ்சங்க. என் பொண்ணு ஒரு கம்பெனியில வேலை பார்க்குறா. அங்க பாலிசி போட்டிருந்தாங்க. அதனால எனக்கு சிகிச்சைக்குப் பணம் கிடைச்சதுங்க. அதுலயும் நமக்கு பணம் மிச்சம். ஆகவேதான் கணக்குப் பார்க்காமல் உதவுகிறோம்ங்க.
எனக்கு ஆண் பிள்ளைகள் இல்லை. இருந்தா அவங்க நமக்குப் பின்னாடி இந்த சேவையை செய்வாங்க. அதற்குதான் வாய்ப்பு இல்லாமல் போயிடுச்சு" என்கிறார் வெங்கட்ராமன்.

ஸ்டாலின் உங்களைப் பாராட்டி இருக்காரே? எனக் கேட்டால், "ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவருக்கு இருக்குற வேலை பிசியில என்னைய பார்த்துப் பாராட்டி இருக்காரு. அதுதான் மகிழ்ச்சியா இருக்கு. நடுவுலகூட இந்த ஹோட்டல் தொழிலையே விட்டுவிடலாமென்று நினைச்சேன். இப்படி அடிக்கடி சிலர் ஊக்கப்படுத்தும் போது அந்த யோசனையைத் தள்ளிப் போட்டுவிடுவேன். இந்த ஊக்கம்தாங்க மனுஷனுக்கு முக்கியம். பணம் எல்லாம் முக்கியம் இல்லைங்க" என்கிறார் இந்த வள்ளல்.
நோயாளிகளுக்கு உதவ வேண்டும் என விருப்பம் எப்போது வந்து எனக் கேட்டால், பல வருடங்களுக்கு முன்னால் ஒரு பாட்டி வந்து இட்லி கேட்டார். அவர் வரும்போது தோசைதான் இருந்தது. ஆனால் அவர் விடாப்பிடியாக இட்லியே கேட்டார். நான் விசாரித்தேன்.

10 ரூபாய்க்கு இட்லி வாங்கினால் வயிறு முழுக்க நானும் என் கணவரும் சாப்பிடலாம். தோசை என்றால் வயிறு நிரம்பாது. ஊருக்குப் போனால்தான் பணம் வரும். கணவர் மருத்துவமனையில் இருப்பதால் வருமானம் இல்லை என்று கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்தான் இந்த ஏழை நோயாளிகளுக்கும் அவரைக் கவனித்துக் கொள்ள வரும் உறவினருக்கும் குறைந்த ரூபாயில் உணவளிக்க முன்வந்துள்ளார் வெங்கட்ராமன், இதேபோல மருத்துவமனையில் நோயாளிகளுடன் தங்கி உள்ளவர்களுக்குப் போர்வை இலவசமாகத் தந்து வருகிறார். எல்லாம் ஒரு மனிதநேயத்திற்காகத்தான்.

'ஊரில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்' என நாம் சொன்னதற்கு, 'அப்படி எல்லாம் பெயர் எடுக்கனும்னு ஆசை இல்லைங்க. நாம உதவி செய்றோம். அது நமது கடமை" என்கிறார் வெங்கட்ராமன்.
முதன்முதலாக தினம் பத்து பேருக்குச் சாப்பாடு போடத் தொடங்கிய இந்த உணவகம், இன்று தினமும் 60 பேருக்கு உணவளித்து வருகிறது. தனி மனிதராக இந்தச் சுமையைத் தூக்கிச் சுமக்கிறார் இந்த மனிதர்.












Click it and Unblock the Notifications