திருப்புமுனை தேர்தலாக இருக்கும்.. தீர்ப்பு கொடுத்த உற்சாகம்.. நேராக ஈரோடு சென்ற எடப்பாடி பழனிசாமி!
ஈரோடு இடைத்தேர்தல் திருப்புமுனை தேர்தலாக இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திருப்புமுனை தேர்தலாக இருக்கும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் இருந்து நேராக ஈரோடு சென்ற எடப்பாடி பழனிசாமி, ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டுள்ள அதிமுக நிர்வாகிகளை சந்தித்தார்.
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருக்கிறது. மேலும் பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் கூறியிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாங்கள் உறுதி செய்கிறோம் என்று கூறிய நீதிபதிகள், ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ஈரோட்டில் இபிஎஸ்
உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தபோது எடப்பாடி பழனிசாமி மதுரையில் இருந்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, தீர்ப்புக்கு பின் உற்சாகமடைந்தார். இதன்பின்னர் ஈரோடு புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது அதிமுகவின் முன்னாள அமைச்சர்கள் சால்வை போர்த்தி மரியாதை அளித்தனர்.

ஈரோடு ஃபார்முலா
இதனைத் தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களும் எழுச்சி பெற்றுள்ளார்கள். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்று தெரிவித்தார். தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களை திமுகவினர் அடைத்து வைக்கும் காட்சிகளை பார்க்க முடிகிறது. இதுவொரு ஜனநாயக படுகொலை. திருமங்கலம் ஃபார்முலாவை தொடர்ந்து ஈரோடு ஃபார்முலா வந்துவிட்டது.

எங்கள் கொள்கை
இதுபோல் வாக்காளர்களை அடைத்து வைக்கும் போக்கு தொடர்ந்தால், அதிமுக நிர்வாகிகள் போராட்டத்தில் குதிப்பார்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து 2024ம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் இருக்குமா என்ற கேள்விக்கு, அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து தான் அனைத்து முடிவுகளை எடுப்போம். அதுதான் எங்களின் கொள்கையும், எண்ணமும். அதேபோல் கூட்டணியும் எங்களுக்கு தொடர்ந்து வருகிறது என்று கூறினார்.

திருப்புமுனை
தொடர்ந்து, திருப்புமுனை தேர்தலாக அமையுமா என்ற கேள்விக்கு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு என்று மக்கள் ஏராளமான பாதிப்புகளை சந்தித்துள்ளனர். விசைத்தறி தொழில்கள் திமுக ஆட்சியில் நலிந்துவிட்டன என்று விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications