ரூ.200 வழங்கி கமல் பிரசாரத்துக்கு கூட்டம் சேர்த்த நிர்வாகிகள்! தீயாய் பரவும் வீடியோ -பாய்ந்த வழக்கு
ஈரோடு: ஈரோட்டில் திமுக வேட்பாளர் பிரகாசை ஆதரித்து நேற்று கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். அப்போது மக்களுக்கு ரூ.200 வழங்கி கூட்டம் கூட்டப்பட்டதாக வீடியோ வெளியாகி பரவி வரும் சூழலில் சம்பவம் குறித்த விசாரணைக்கு கலெக்டர் அதிரடி உத்தரவிட்ட நிலையில் தற்போது அதிரடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்ளது.

நடைபெறும் லோக்சபா தேர்தலில் கமல்ஹாசனுக்கு கோவை தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரேயொரு ராஜ்யசபா சீட் மட்டுமே திமுக வழங்கியது.
இதனால் கமல்ஹாசன் கட்சி வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை. இருப்பினும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்கள் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்களை ஆதரித்து பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். முதல் முதலாக நேற்று ஈரோட்டில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்கள் பிரசாரத்தை தொடங்கினர்.
ஈரோட்டில் திமுக சார்பில் பிரகாஷ் என்பவர் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நேற்று கமல்ஹாசன் ஈரோட்டில் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார். பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்திக்க பயப்படுகிறார். தமிழ்நாட்டில் இருந்து நாம் கொடுக்கிற வரியில் ஒரு ரூபாய்க்கு வெறும் 29 பைசா தான் திரும்ப வருகிறது. ஆனால் வடமாநிலங்களில் ஒரு ரூபாய் வரியாக சென்றால் மத்திய அரசு ரூ.7யை திரும்ப வழங்குகிறது'' என குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கிடையே தான் பிரசாரத்தில் பங்கேற்ற மக்களுக்கு ரூ.200 பணம் வழங்கப்பட்டதாக வீடியோக்கள் வெளியாகின. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதோடு, பணம் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. எக்ஸ் வலைதளம் மூலம் ஈரோடு தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான ராஜகோபால் சுங்கராவிடம் புகாரளிக்கப்பட்டது.
இதையடுத்து ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, ‛‛நாங்கள் வீடியோவை விசாரணைக்காக காவல்துறைக்கு அனுப்பியுள்ளோம். விசாரணை நடந்து வருகிறது'' என தெரிவித்தார். அதன்பிறகு இன்று மீண்டும் ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுங்கரா தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛சம்பவம் தொடர்பாக ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் பறக்கும் படையினர் முதற்கட்ட விசாரணையை நடத்தினர். வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது'' என தெரிவித்துள்ளார். இதன்மூலம் கமல்ஹாசனின் பிரசாரத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications