ஈரோடு கல்லூரியிடம் ஐந்து லட்சம் வாங்க போகும் மாணவி.. என்ன நடந்தது.. மாணவர்கள் அறிய வேண்டியவை
ஈரோடு: ஈரோட்டில் படிக்க சேர்ந்த கல்லூரியிடமே ஒரு பெண் ஐந்து லட்சம் வாங்க போகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கரடிசித்தூர் தாவழப்பட்டுரோடு பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி, தனியார் கல்லூரி ஒன்றில் படித்துள்ளார். அந்த கல்லூரியில் அவர் படிக்க சேர்ந்த ஒரே மாதத்தில் படிக்க போகவில்லை.. அவருக்கு அசல் சான்றிதழ்களை திரும்ப தராத புகாரில் கல்லூரி நிர்வாகம் ஐந்து லட்சம் இழப்பீடாக தர வேண்டும் என்று ஈரோடு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கரடிசித்தூர் தாவழப்பட்டுரோடு பகுதியை சேர்ந்த பிரம்மதேவன் என்பவருடைய மகள் பிரியதர்ஷினி, ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தில் உள்ள ஜே.கே.கே. முனிராஜா இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்சஸ் காலேஜ் ஆப் பார்மசி கல்லூரியில் படிக்க விரும்பியுள்ளார்.

இதன்படியே ஜே.கே.கே. முனிராஜா இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்சஸ் காலேஜ் ஆப் பார்மசி கல்லூரியில் கடந்த 2023-ம் ஆண்டு பி.பார்ம் படிப்பில் சேர்ந்துள்ளார் மாணவி பிரியதர்ஷினி. ஒரு மாதம் மட்டும் கல்லூரிக்கு சென்றார். அதன்பிறகு அவரது தந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாம். இதனால் பிரியதர்ஷினி கல்லூரிக்கு செல்ல முடியவில்லை.
மேலும், தந்தையை கவனித்து கொண்டே அருகில் உள்ள கல்லூரியில் மேற்படிப்பை தொடர அவர் விரும்பினாராம். இதனால் கல்லூரியில் தனது அசல் கல்வி சான்றிதழ்களை திருப்பி தரும்படி கேட்டு உள்ளார். அதற்கு 3 ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை செலுத்திய பிறகுதான் சான்றிதழ்கள் தர முடியும் என்று கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டதாம்.
இந்தநிலையில் தனது சான்றிதழ்களை திருப்பி வழங்க உத்தரவிடக்கோரி ஈரோடு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பிரியதர்ஷினி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஈரோடு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் நேற்று தீர்ப்பு கூறியது.
அதில், பாதிக்கப்பட்ட மாணவி பிரியதர்ஷினிக்கு 15 நாட்களுக்குள் எந்தவித தொகையும் பெறாமல் அசல் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகம் திருப்பி ஒப்படைக்க வேண்டும்.. மாணவிக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதால் இழப்பீடாக ரூ.5 லட்சம், வழக்கு செலவு தொகை ரூ.10 ஆயிரத்தை ஒரு மாத காலத்துக்குள் கல்லூரி நிர்வாகம் வழங்க வேண்டும் என்று குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு மாணவர் எதிர்பாராத காரணங்களால் (உடல் நலக்குறைவு, குடும்பத்தில் அவசர நிலை, நிதி நிலை சிக்கல்) கல்லூரியில் படிக்கும் போது, பாதியில் வெளியேற நேரிட்டால், அசல் சான்றிதழ்களைத் திருப்பி அளிப்பதற்காக மீதமுள்ள முழு கல்வி ஆண்டிற்கான கட்டணத்தையும் செலுத்தும்படி நிபந்தனை விதிப்பது சட்டவிரோதம் ஆகும். அந்த அடிப்படையில் தான் மாணவி வழக்கு தொடர்ந்து இருந்தார். தற்போது நீதிமன்றம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications