40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை.. ‘பள்ளிகளுக்கு விடுமுறை’ - ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
ஈரோடு : கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக அந்தியூர் தனித்தீவாக மாறியுள்ள நிலையில், ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உன்னி உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கனமழை தொடர்ந்து வருகிறது. இதனால், வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு
ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய மழை பெய்தது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வரட்டுப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஏரிகள் நிரம்பின
கனமழை காரணமாக அந்தியூர் பெரிய ஏரி, கெட்டிச் சமுத்திரம் ஏரி, எண்ணமங்கலம் ஏரி, கரும்பாறைபள்ளம் ஏரி, தண்ணீர் பள்ளம் ஏரி, வேம்பத்தி ஏரி, பிரம்மதேசம் ஏரி ஆகிய 7 ஏரிகளும் முழுமையாக நிரம்பியுள்ளன. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து வரும் தண்ணீர் ஏரிக்குள் புகுந்து நேரடியாக வெளியேறி அந்தியூர் அண்ணாமடுவு பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

வெள்ளம் - சாலைகள் துண்டிப்பு
மேலும் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். அந்தியூரிலிருந்து ஆதிரெட்டியூர் வழியாக வெள்ளித்திருப்பூர், சென்னம்பட்டிக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

பள்ளிகள் விடுமுறை
இந்நிலையில், அந்தியூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை திங்கட்கிழமை (அக்டோபர் 17) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உன்னி வெளியிட்டுள்ள உத்தரவில், அந்தியூர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அந்தியூர் வட்டத்தில் நாளை ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications