ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. நாதக வேட்பாளர் சீதாலட்சுமி போலீசுடன் வாக்குவாதம்.. பரபரப்பு
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 9.30 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் 18,830 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 2,268 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். இதற்கிடையே நாம் தமிழர் கட்சி முகவர்களை வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கவில்லை என்று ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் சீதாலட்சுமி போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லி சட்டசபை தேர்தலோடு, காலியாக இருந்த ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 5 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. இந்த நிலையில் இன்று காலை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை துவங்கியது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் விசி சந்திரகுமார் போட்டியிடுகிறார். இதேபோன்று நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக சீதாலட்சுமி போட்டியிடுகிறார். அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதியை புறக்கணித்துள்ளதால், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இன்று காலை 8.00 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. முதலில் முகவர்கள் முன்னிலையில் தபால் வாக்குப்பெட்டி திறக்கப்பட்டது. தபால் வாக்குகள் முகவர்கள் மற்றும் வேட்பாளர் முன்னிலையில் எண்ணப்பட்டன. அப்போது உள்ளே நுழைந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் அவரது முகவர் ஆகியோரை போலீசார் உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர்.
இதற்கு சீதாலட்சுமி எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது சீதாலட்சுமி, 'வாக்கு எண்ணிக்கை மையத்தில் கூட போலீசார் அனுமதிக்க மறுக்கின்றனர்' என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். ஏன் நாம் தமிழர் கட்சி முகவர்களை வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கவில்லை என்று கூறி வாக்குவாதம் செய்தார். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சீதாலட்சுமி மற்றும் அவரது முகவரை போலீசார் உள்ளே அனுமதித்தனர். தபால் வாக்குகள் என்னும் போது பத்திரிக்கையாளர்கள் வெளியே அனுப்பப்பட்டனர்.
வாக்கு எண்ணும் மையத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. திமுக வேட்பாளர் விசி சந்திரகுமாரே வெற்றி பெறுவார் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்த நிலையில், அதனை மெய்ப்பிக்கும் வகையிலேயே தற்போதைய நிலவரம் காண்பிக்கின்றது.
காலை 9.30 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் 18,835 வாக்குகளை பெற்று 15 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 2,268 வாக்குகளை பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications