ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 53 பள்ளிகளுக்கு நாளை முதல் 2 நாட்களுக்கு விடுமுறை.. வெளியானது அறிவிப்பு
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 53 பள்ளிகளுக்கு நாளை, நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி காலமானதால், தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (பிப்ரவரி 5) தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தல் களத்தில் திமுக vs நாம் தமிழர் கட்சி என நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள், புதிதாக தொடங்கபட்ட விஜய் தலைமையிலான தவெக வரை பெரும்பாலான கட்சிகள் புறக்கணித்ததால் திமுக, நாதக இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில், தமிழ்நாடே உற்று நோக்கும் இந்த இடைத்தேர்தலின் பரப்புரை இன்று திங்கட்கிழமை (பிப்ரவரி 3) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
தேர்தல் ஆணையம், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து, தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்படுகிறது. இந்த இடைத்தேர்தலில் ஆளும் திமுக சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 46 பேர் களம் காண்கின்றனர்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 33 வார்டுகள் உள்ளன. இதில் 53 வாக்குப்பதிவு மையத்தில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 636 (1,09,636) ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 760 (1,16,760) பெண் வாக்காளர்களும், 37 மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 (2,26,433) வாக்காளர்கள் வரும் 5-ஆம் தேதி வாக்களிக்க உள்ளனர்.
இந்த இடைத்தேர்தலுக்கான அனல் பறக்கும் தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இடைத்தேர்தலுக்கான பரப்புரை நிறைவடைந்த நிலையில், தேர்தல் பணிகளுக்காக வெளியூரில் இருந்து வந்தவர்கள், உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 53 பள்ளிகளுக்கு நாளை, நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், தேர்தல் பணிகளுக்காக ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். வாக்குச்சாவடி இல்லாத பள்ளிகள் பிப்ரவரி 5 ஆம் தேதி வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்டக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
மேலும், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு இன்று, நாளை, நாளை மறுநாள் (பிப். 3, 4 , 5) மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான பிப்ரவரி 8 ஆகிய நான்கு நாட்களுக்கு விடுமுறை அறிவித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தடையை மீறி மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications