4% உயரும்.. ஈரோடு கிழக்கில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்.. ஸ்டாலினுக்கு போன முக்கிய ரிப்போர்ட்! அதிமுகவா?
செந்தில் பாலாஜி உள்ளிட்ட 11 அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை தேர்தல் பணிக்காக இங்கே திமுக களமிறக்கி உள்ளது.
ஈரோடு: அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு கண்டிப்பாக ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் கள நிலவரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கும் முக்கியமான ரிப்போர்ட் ஒன்றும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்று திமுக தீவிரமாக வேலை பார்த்து வருகிறது. முக்கியமாக ஈரோடு கிழக்கில் 60 சதவிகித வாக்குகளையாவது பெற வேண்டும் என்பதில் திமுக தீவிரமாக இருக்கிறதாம்.
ஈரோடு கிழக்கில் 17 சதவிகிதம்தான் அங்கே கவுண்டர்கள் இருக்கிறார்கள். 36 சதவிகிதம் செங்குந்த முதலியார்கள் இருக்கிறார்கள். 17 சதவிகிதம் மைனாரிட்டிகள் இருக்கிறார்கள்.

எத்தனை பேர்
6 சதவிகிதம் அருந்ததியர்கள் இருக்கிறார்கள். இதில் கவுண்டர்கள் வாக்குகளை விட மற்றவர்களை சேர்த்தால் அதிக வாக்குகள் வருகிறது. முக்கியமாக செங்குந்த முதலியார்கள்தான் இங்கு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார்கள். இந்த இடைத்தேர்தலில் பெரும்பாலும் மைனாரிட்டிகள் திமுகவிற்குத்தான் வாக்களிப்பார்கள் என்று திமுக தரப்பு கருதுகிறதாம். அதேபோல் தாழ்த்தப்பட்ட மக்கள் விசிக கூட்டணி காரணமாக திமுகவிற்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தது முதலியார்கள் 36 சதவிகிதத்தில் 25 சதவிகிதம் பேர் திமுக கூட்டணி வாக்களித்தால் கூட 20+ 17 + 6 என்று 48 சதவிகிதம் எளிதாக வந்துவிடும் என்று திமுக கணக்கு போட்டு வருகிறதாம்.

டார்கெட் என்ன?
செந்தில் பாலாஜி உள்ளிட்ட 11 அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை தேர்தல் பணிக்காக இங்கே திமுக களமிறக்கி உள்ளது. இதில் ஒவ்வொருவருக்கும் 3-4 வார்டு ஒதுக்கப்பட்டு உள்ளது. இங்கே சுமார் 35 வார்டுகள் உள்ளன. இதில் செந்தில் பாலாஜிக்கு வெள்ளாள கவுண்டர்கள் இருக்கும் வார்டுகள் கொடுக்கப்பட்டு உள்ளன. இவர்கள் தற்போது தேர்தல் நேரத்தில் செய்யும் பணிகள், ஆளும் கட்சி இறக்கும் பவர், செந்தில் பாலாஜி, முத்துச்சாமி போன்றவர்கள் இறங்கி வேலை செய்யும் போது வாக்கு 60 சதவிகிதம் வரை எடுக்க வாய்ப்பு உள்ளது என்று திமுக திட்டமிட்டுள்ளது.

பொதுக்குழு வழக்கு
ஆனால் தற்போது பொதுக்குழு வழக்கு தீர்ப்பு காரணமாக ஈரோடு கிழக்கில் கள நிலவரம் மாறி உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் பெரும் போராட்டத்திற்கு பின் எடப்பாடி பழனிசாமி ஆதரவு வேட்பாளர் கே. எஸ் தென்னரசு களமிறக்கப்பட்டு உள்ளார். தற்போது தீர்ப்பு காரணமாக எடப்பாடிதான் அதிமுக என்பது உறுதியாகிவிட்டது. ஏற்கனவே அவரின் கையில் சின்னம் இருக்கிறது. தற்போது பொதுக்குழு வழக்கிலும் எடப்பாடி வென்றுவிட்டார். இதனால் ஈரோடு அதிமுக நிர்வாகிகள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்து உள்ளது. அதாவது அதிமுக பழைய நிலைமைக்கு சென்றுவிட்டு.. மீண்டும் ஒற்றை தலைமைக்கு கீழ் வந்துவிட்டது என்ற உற்சாகத்தில் நிர்வாகிகள் இருக்கின்றனர்.

பாஜக
மேலும் பாஜக, அமமுக ஆகிய கட்சிகள் களத்தில் இல்லை. பாஜக அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்கிறது. இதனால் தேர்தல் களமே பெரிய அளவில் மாறி உள்ளது. இதனால் அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு கண்டிப்பாக ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் கள நிலவரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கும் முக்கியமான ரிப்போர்ட் ஒன்றும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஈரோடு கிழக்கில் அதிமுகவின் தீர்ப்பு காரணமாக 4 சதவிகித வாக்குகள் வரை கூடுதலாக அதிமுக பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

வாக்குகள்
அதாவது அதிமுக வெல்ல வாய்ப்பு உள்ளதாக ரிப்போர்ட் எதுவும் செல்லவில்லை. ஆனால் கூடுதலாக 4 சதவிகிதம் வரை வாக்குகள் செல்லலாம். அதிமுக திடீரென புத்துயிர் பெற்றுள்ளது. அதனால் அங்கே எதிர்பார்த்ததை விட கூடுதல் வாக்குகள் செல்ல வாய்ப்பு உள்ளதாக ரிப்போர்ட் சென்றுள்ளதாம். இதையடுத்து ஈரோடு கிழக்கில் தேர்தல் பணிகளை திமுகவும் துரிதப்படுத்தி உள்ளதாம். அதிமுக திடீரென அடைந்து இருக்கும் இந்த உத்வேகத்தை சமன் செய்யும் விதமாக திமுக சார்பாக பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications