நானே களமிறங்கிக்கிறேன்.. நேரடியாக பணிகளை தொடங்கிய எடப்பாடி.. ஒற்றை ஆளாக.. ஆஹா.. அதிரும் அதிமுக
ஈரோடு கிழக்கில் தேர்தல் பணிகளை கவனிக்க, முன்னாள் அமைச்சர்கள் உள்ளடக்கிய 117 பேர் கொண்ட மிகப்பெரிய தேர்தல் பணிக்குழுவை அமைத்தார் எடப்பாடி.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தேர்தலில் அதிமுக டாப் நிர்வாகிகள் பெரிதாக பணிகளை கவனிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமியே நேரடியாக களமிறங்கி தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் பெரும் போராட்டத்திற்கு பின் எடப்பாடி பழனிசாமி ஆதரவு வேட்பாளர் கே. எஸ் தென்னரசு களமிறக்கப்பட்டு உள்ளார். இவருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து கே.எஸ் தென்னரசு வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டார்.
தற்போது கே. எஸ் தென்னரசு ஈரோடு கிழக்கு தேர்தலுக்காக தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். வீடு வீடாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி
இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி கடந்த இரண்டு நாட்களாக ஈரோடு கிழக்கில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று ஈரோடு கிழக்கில் வாகன பிரச்சாரம் மேற்கொண்டவர் இன்று மீண்டும் பிரச்சார செய்கிறார். தேர்தல் முடியும் வரை எடப்பாடி பழனிசாமி வாகன பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. கட்சியில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் பலர் தேர்தல் பணிகளை சரியாக கவனிக்காத நிலையில்தான் எடப்பாடியே தேர்தல் களத்தில் நேரடியாக இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தல் பணிகள்
ஈரோடு கிழக்கில் தேர்தல் பணிகளை கவனிக்க, முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள் உள்ளடக்கிய 117 பேர் கொண்ட மிகப்பெரிய தேர்தல் பணிக்குழுவை அமைத்தார் எடப்பாடி. . செங்குட்டுவன் தலைமையில் மாஜி அமைச்சர்கள் படையே அங்கே களமிறக்கப்பட்டு உள்ளது. தங்கமணி, வேலுமணி, தமிழ் மகன் உசேன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், காமராஜ், சி.வி.சண்முகம், பொன்னையன், செம்மலை, சின்னசாமி, சி.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜூ, உதயகுமார், தளவாய் சுந்தரம், வளர்மதி, தம்பிதுரை, செல்லூர் ராஜூ, தனபால், ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, டுமலை ராதாகிருஷ்ணன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேவூர் ராமச்சந்திரன் திண்டுக்கல் சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன், என்று முன்னாள் அமைச்சர்கள் எல்லோரும் இங்கே எடப்பாடி மூலம் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

பணிகளை செய்யவில்லை
இந்த நிலையில்தான் தேர்தல் பணிகளை இவர்கள் யாரும் சரியாக செய்யவில்லை என்று எடப்பாடிக்கு புகார் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களாக வெளிமாவட்டத்தை சேர்ந்த அதிமுக வி.ஐ.பி.நிர்வாகிகள் யாரும் தொகுதியில் இல்லை. மாஜி அமைச்சர்கள் பலரும் தொகுதியில் இல்லை என்று கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் ஆளும் கட்சி கூட்டணிதான் இங்கே வெற்றிபெறும் என்ற நினைப்பில் மாஜிக்கள் பலர் ஏன் தேவையின்றி வெயிலில் அலைய வேண்டும் என்று பிரச்சாரம் செய்யாமல் வீட்டில் முடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நொந்து போயிருக்கிறார்கள். இதனால் அதிமுக தேர்தல் களமும் அலப்பறை இன்றி காணப்படுகிறது.

களமிறங்கிய எடப்பாடி
இதையடுத்தே எடப்பாடி பழனிசாமியே நேரடியாக களமிறங்கி தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார். நேற்று பிரச்சார கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுகவை கடுமையாக தாக்கி பேசினார். நேற்று இவர் மேற்கொண்ட பிரச்சாரம்தான் அதிமுக சார்பில் கவனிக்கப்பட்ட, கவனம் ஈர்த்த ஒரே பிரச்சாரம் ஆகும். இவரின் பிரச்சாரத்திற்கு வரவேற்பு அதிகம் உள்ளதால் வரும் நாட்களில் மேலும் இவர் தனியாக பிரச்சாரம் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications