ஈரோடு கிழக்குத் தொகுதி இடைதேர்தல்: இந்தியில் துண்டு பிரசுரம் விநியோகித்த திமுக – நாம் தமிழர் கிண்டல்
ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. திமுக, நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் திமுகவினர் அங்கு இந்தி மொழியில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்ததை நாம் தமிழர் கட்சி விமர்சித்து வருகிறது.
ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் அங்கு இரண்டாவது முறையாக இடைத்தேர்தல் நடக்கிறது.

இந்தமுறை அங்கு இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பதிலாக திமுக நேரடியாக களமிறங்கியுள்ளது. முன்னாள் எம்எல்ஏவும் திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளருமான வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 2026 ஆம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால் இந்த இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஆனால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது. அதேபோல பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகளும் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளன. திமுகவுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி மட்டும் களத்தில் இறங்கியுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
களம் தற்போது திமுக VS நாம் தமிழர் என்ற நிலையில் உள்ளது. அண்மை காலமாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இது பெரியார் உணர்வாளர்கள் மற்றும் திராவிட இயக்கங்களிடம் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு பெரியாரின் சொந்த மாவட்டம். பெரியாரின் சொந்த மாவட்டத்தில் வைத்தே நாம் தமிழர் கட்சியை முடக்க திமுக கூட்டணி திட்டமிட்டுள்ளது. மறுபக்கம் பெரியாரின் சொந்த மாவட்டத்திலேயே அதிக வாக்குகளை பெற்று திமுகவுக்கு கடுமையான போட்டியளிக்க நாம் தமிழர் முயற்சித்து வருகிறது. இதனால் ஈரோடு தேர்தல் களத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை.
சீமான் ஈரோட்டிலேயே தங்கியிருந்து தினசரி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். திமுகவிலும் மூத்த அமைச்சர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் வடமாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவு வசித்து வருகிறார்கள்.
அந்த மக்களிடமும் திமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்காக இந்தியில் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை திமுகவினர் விநியோகம் செய்துள்ளனர். அதில் உதயசூரியன் சின்னம், சந்திரகுமார் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. "உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் நாள் உள்ளிட்ட மற்ற விபரங்களும் இடம்பெற்றுள்ளது.
இதை நாம் தமிழர் கட்சி சமூகவலைதளங்களில் கிண்டலடித்து வருகிறார்கள். "இதுதான் உங்களின் மொழிப்பற்றா. பெரியார் இதைத்தான் கூறினாரா." என்று விமர்சித்து அந்த துண்டு பிரசுரங்களை சமூகவலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள். இதற்கு திமுக, "வட மாநில மக்கள் அதிகம் இருக்கும் அந்தப் பகுதியில் பிரதான கட்சிகள் அந்த மக்களுக்கு புரிவதற்காக இந்தியில் வாக்கு கேட்டும், துண்டு பிரசுரம் விநியோகம் செய்வதும் வழக்கமானது." என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications