ஈரோடு கிழக்கில் வாகை சூடுவோம்..திண்டுக்கல், மருங்காபுரி போல வரலாற்று வெற்றி..செங்கோட்டையன் உறுதி
திண்டுக்கல், மருங்காபுரி இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றதைப்போல, ஈரோடு கிழக்குத் தொகுதியிலும் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு: இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்று அதிமுக அமைப்புச்செயலாளரும் தேர்தல் பணிக்குழு தலைவருமான கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க தொடங்கிய கே.ஏ செங்கோட்டையன் இதனை தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக மூத்த அரசியல் தலைவர் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுகிறார். தேமுதிக, நாம் தமிழர் தனித்து போட்டியிடுகின்றன.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே திமுகவும் காங்கிரஸ் கட்சியும் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக அத்தனை சக்திகளையும் இடைத்தேர்தல் களத்தில் இறக்கி விட்டுள்ளது. இரட்டை இலை கிடைக்குமா? கிடைக்காதா என்ற பஞ்சாயத்து அதிமுகவில் நீடித்தது. ஒருவழியாக வேட்பாளர் யார் என்று உறுதியாக முடிவான பின்னர் இன்று அதிமுக களத்தில் இறங்கியுள்ளது. வேட்பாளர் தென்னரசு இன்று மணல்மேடு பகுதியில் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு தனது பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார்.

அதிமுக வேட்பாளர் தென்னரசு உடன் கே.ஏ.செங்கோட்டையன், கே.பி. ராமலிங்கம், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அதிமுகவின் மூத்த தலைவர்கள் பிரச்சார களத்தில் உடன் சென்றனர். தொகுதியில் பெண்கள் ஆரத்தி எடுத்து தென்னரசுவிற்கு வரவேற்பு அளித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் தொகுதியைப்போல,மருங்காபுரி தொகுதியைப் போல ஈரோடு கிழக்குத் தொகுதியில் வரலாற்று வெற்றியை அதிமுக பதிவு செய்யும் என்று கூறினார்.
இந்த தொகுதியைப் பொருத்தவரை வெற்றி என்பது எங்களின் இலக்கை எட்டியிருக்கிறது. 9ஆம் தேதியன்று வேட்பாளரின் அறிமுகக் கூட்டம் நடைபெற உள்ளது என்றும் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் என்றாலே திண்டுக்கல் லோக்சபா தொகுதி இடைத்தேர்தல் நினைவுக்கு வரும். 1972-ம் ஆண்டு திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டு எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய ஓராண்டில் நடைபெற்றது. திண்டுக்கல் லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் திமுக சார்பில் பொன் முத்துராமலிங்கம், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் என்எஸ்வி சித்தன், எம்ஜிஆரின் அதிமுக சார்பாக மாயத்தேவர் நிறுத்தப்பட்டனர். அப்போதுதான் தமிழ்நாடு தேர்தல் களத்தில் இரட்டை இலை அதிமுகவுக்கு என அறிமுகமானது. இத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றியை பெற்றது. 2-வது இடம் ஸ்தாபன காங்கிரஸுக்கும் 3-வது இடம் ஆட்சியில் இருந்த திமுகவுக்கும் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து 1974ஆம் ஆண்டில் கோவை மேற்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதிலும் எம்ஜிஆரின் அதிமுகவே வெற்றி பெற்றது.
1987-ல் எம்ஜிஆர் மறைவுக்கு பின் அதிமுக சிதறியது. அப்போது நடந்த தேர்தலில் திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. 1989 மார்ச் 11-ம் தேதி மதுரை கிழக்கு, மருங்காபுரித் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அன்றைக்கு ஆளும் கட்சியாக தி.மு.க அசுரபலத்தில் இருந்தது. ஆனால்,அதிமுக அந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது. அந்த வரலாற்று நிகழ்வுகளைப் போலவே ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெறும் என்று கூறி வருகிறார் செங்கோட்டையன். இரட்டை இலைக்கு சிக்கல் வராமல் பாதுகாத்த அதிமுக வரலாற்று வெற்றியை பதிவு செய்யுமா? பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications