ஸ்டாலின்தான்.. ஈரோடு கிழக்கு முன்னிலையை பார்த்து ஈவிகேஎஸ் சொன்ன வார்த்தை.. ஆஹா பெருந்தன்மை!
பிரச்சாரத்திலேயே என்னுடைய ஆட்சிக்கு கொடுக்கும் மதிப்பாக இந்த தேர்தலில் வாக்கு அளியுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைதேர்தல் வெற்றி முழுக்க முழுக்க முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இவர் ஈரோடு கிழக்கில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. இங்கே திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து அதிமுக சார்பாக கேஎஸ் தென்னரசு போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா நவநீதன் போட்டியிட்டார். இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் நிலவரப்படி ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் முன்னிலை வகித்து வருகிறார்.

அதிமுக பின்னடைவு
தற்போது இருக்கும் நிலவரப்படி பார்த்தால் கடந்த முறையை விட காங்கிரஸ் இந்த முறை அதிக வாக்குகளை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 15 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று திமுக கூட்டணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு கிழக்கில் இதுவரை காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 32506 வாக்குகளை கடந்து முன்னிலை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 11219 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி 1822 வாக்குகளை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. தேமுதிக வெறும் 209 வாக்குகளை மட்டும் பெற்றுள்ளது. இதனால் திமுக தரப்பு பிரம்மாண்ட வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈவிகேஎஸ் இளங்கோவன்
இந்த முன்னிலை குறித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில்,. இந்த வெற்றி முழுக்க முழுக்க முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம். 20 மாதம் சிறப்பாக ஆட்சி செய்து இருக்கிறார். இந்த 20 மாதத்தில் அவர் கொடுத்த வாக்குறுதிகளில் 80 சதவிகிதத்தை நிறைவேற்றி இருக்கிறார். அது மிகப்பெரிய விஷயம். மக்கள் இதை எல்லாம் பார்த்து இருக்கிறார்கள். அதற்கு கிடைத்த வெற்றிதான் இது.

ஸ்டாலின் ஆட்சி
இந்த வெற்றி என்பதை முதல்வருக்கு கிடைத்த வெற்றியாக, ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கிறேன். முழுமையாக நிலவரம் மாலை 5 மணிக்கே தெரியும். வாக்கு வித்தியாசம் அதிகம் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்தான். என்றைக்கு மதசார்பற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி இங்கே போட்டியிடும் என்று அறிவித்தாரோ அப்போதில் இருந்தே திமுக முத்துசாமி, அமைச்சர் கேஎன் நேரு போன்றவர்கள் களத்தில் இருந்தனர். அவர்கள் எல்லாம் தேர்தல் வேலைகளை தீவிரமாக கவனித்தனர். அது தற்போது தேர்தலிலும் பலன் அளித்து உள்ளது, என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது.. என்னுடைய ஆட்சிக்கு கொடுக்கும் மதிப்பாக இந்த தேர்தலில் வாக்கு அளியுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டார். இந்த நிலையில்தான் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதை குறிப்பிட்டு பேசி இருக்கிறார். தன்னுடைய வெற்றி என்றெல்லாம் சொல்லாமல் பெருந்தன்மையாக இளங்கோவன் இது ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என்று கூறி உள்ளார். இன்னும் மொத்தமாக வாக்கு எண்ணிக்கை முடியாத நிலையில், இன்று மாலைக்குள் அதிக அளவு வாக்கு வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications